Sunday, December 27, 2015

பீப்-தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்; சட்டரீதியாக சந்திப்போம்

 பீப் பாடல் சர்ச்சைக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று டி.ராஜேந்தர் உறுதிபட தெரிவித்தார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் ‘யூடியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்" என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினார் டி.ராஜேந்தர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் டி.ராஜேந்தர் பேசும்போது, "செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். நான் வாழ்க்கையில் என்ன செய்தாலும், என்னுடைய மனது மட்டும் எப்போதும் உடைந்து போனதில்லை. காரணம், என்னை வாழ வைத்த தெய்வமும், என்னுடைய ரசிகர் பெருமக்களான தமிழக மக்கள் தான். தமிழகத்தில் எவ்வளவோ காலகட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள். எங்களுக்கு பக்கபலமாக நின்று அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்னவர் என் மனைவி. எத்தனை இடி வந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான் குரல் கொடுப்பான்." என்று தெரிவித்தார்

0 comments:

Post a Comment