Wednesday, December 2, 2015

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளையும் ஆரோக்கியம் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த நேரத்தில் எவ்வகை உணவுகள் சாப்பிடலாம் என்பதை தெரிவு செய்து சாப்பிட வேண்டுமே தவிர, அதனை விட்டுவிட்டு இஷ்டத்திற்கு ஏதேனும் உணவுகளை எடுத்துக்கொண்டு உடல்நல உபாதைகளுக்கு ஆளாகக்கூடாது.

குறிப்பாக இரவு உணவில் கவனம் செலுத்தாவிட்டால் செரிமானப்பிரச்சனைக்கு ஆளாகி இரவு தூக்கத்தை தொலைக்க நேரிடும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும்.

மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும்.

மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம்.

பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் நம்மை தாக்குவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.

இரவு நேர உணவுகள்

உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

எவற்றைச் சாப்பிடக்கூடாது?

நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

சாப்பிடும் நேரம்

இரவு 7 – 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். தாமதமாக சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.

இளையராஜாவின் மலரும் நினைவுகள் - ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது?

      இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னும் அது உருவான வரலாறு உள்ளது.

இளையராஜா என்ற இசை ஆளுமையின் திறமையை, ஞானத்தை வெளிப்படுத்தும் சரித்திரங்கள் அவை. அவ்வப்போது ஊடகங்களில் தனது பாடல்கள் உருவானது பற்றி இளையராஜா பேசியிருக்கிறார்.

இளையராஜாவின் முக்கியப் பாடல்களில் ஒன்றான, ஜனனி ஜனனி பாடல் எப்படி உருவானது? அதனை இளையராஜாவே பாடும்படியான சூழல் எப்படி அமைந்தது? இளையராஜாவின் வார்த்தைகளில் கேட்போம்.

டைரக்டர் கே.ஷங்கர் என்னிடம் 'தாய் மூகாம்பிகை' படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.


மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.

அடுத்த நாள் பூஜை. பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.

‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற காட்சி' என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர்.


இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, "குருவே.. நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.

உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கண்ணையா அண்ணன் என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார்.

கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர்.

நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், 'ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment  தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது.

ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே... ஒரு சங்கீத வித்வான் பாடுவது போலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..' என்று எனக்குத் தோன்றியது.

நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக் கொண்டிருந்தனர்.

மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ' என்று எழுதினார்.

பாடலை முழுவதும் பாடி முடித்தால் கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம்.

அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.

இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களுக்குப் பின்னும் இப்படியொரு கதை உள்ளது. அதனை அவர் சொல்ல யாராவது தொகுத்தால் சிறந்த இசை வரலாற்று ஆவணமாக இருக்கும்.

வெள்ளப்பாதிப்பால் தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைப்பேசி சேவை

     வெள்ளப்பாதிப்பை அடுத்து தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இன்று முதல் ஒருவராத்திற்கு தொலைப்பேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

சென்னையில் வரலாறு காணாத கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழையினால் தற்போது போக்குவரத்து, ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம்  பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கட்டணம் கட்டவில்லை என்பதால் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்குகம் தற்போது கனமழையின் காரணமாக தொடர்பு துண்டிக்கப்படாது என்றும் தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பை அடுத்து தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இன்று முதல் ஒருவரத்திற்கு தொலைப்பேசி சேவையை பயன்படுத்தலாம் என்றும் மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

மேலும், ஒருவரத்திற்கு பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளர்களும் கட்டணம் இல்லாமல் இலவசமாக தொடர்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வாசிகளுக்கு இலவச டாக்டைம், ஏர்டெல் அறிவிப்பு..!!

சென்னையில் பெய்து வரும் கனமழையில் மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் விசேஷ சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 வரை டாக்டைம் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் மழையின் காரணமாக தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் ஏர்டெல் சேவைகளை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் சேர்ந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இச்சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.30 டாக்டைம் வரை பெற முடியும், மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குள் 10 நிமிடங்கள் வரை பேச இரு நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்படாமல் இருக்க இரு நாட்களுக்கு வேலிடிட்டியுடன் 50எம்பி இண்டர்நெட் வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் போஸ்ட்பெய்டு கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மூழ்கிய சாமி சிலை தலை மீது ஏறி தப்பிய பாம்பு.. வைரலாகும் போட்டோ

மழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.

சென்னையடுத்த மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழையால், கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் நின்ற சாமி சிலையின் கழுத்து அளவுக்கு நீர் ஓடிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சாமி சிலை தலை மீது பாம்பு ஒன்று ஏறி உட்கார்ந்தபடி வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த படம், வாசுதேவன் என்பவரால் எடுக்கப்பட்டு, டிவிட்டரில் பதியப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாம்பு தன்னை காத்துக்கொள்ளும்போது, மனிதர்களாக நாம் நம்மை காப்பாற்ற வழி கிடைக்கும் என்று உணர்த்துவதை போல இந்த படம் அமைந்துள்ளது.

மழை எச்சரிக்கை..!! ரமணன் ரகசியம் இது தானா..??

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து நகரமே நீரில் தத்தளிக்கின்றது. மழை பாதிப்பில் தவிக்கும் மக்கள் ஒரு பக்கம், பள்ளி, கல்லூரி விடுமுறைகளை கொண்டாடும் மாணவர்கள் ஒரு பக்கம் என அனைவரும் தற்சமயம் ஆவலோடு காத்திருந்து, அவ்வப்போது பார்ப்பது செய்திகளை தான்.

இது வரை செய்திகளை பார்க்காதவரையும் கூட இந்த மழை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கின்றது. ஊர் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் மழை சார்ந்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திகளின் வாயிலாக மக்களுக்கு அடிக்கடி அறிவித்து வருகின்றது.

வானிலை நிலவரங்கள் சார்ந்த அறிவிப்புகளை அறிவிக்கும் ரமணன் பள்ளி குழநை்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் தெய்மாக பார்க்கப்படுகின்றார் என்றே கூற வேண்டும். அப்படியாக வானிலை ஆய்வு மைய அதிகாரியான ரமணன் அறிக்கையின் படி மழை வெலுத்து வாங்கவது ஏன், ரமணன் எப்படி மழையை முன்கூட்டியே கணிக்கின்றார் என்பது தெரியுமா.

இந்தியாவில் வானிலை ஆய்வு மையமானது 1875 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. துவக்கத்தில் கொல்கத்தாவில் இருந்த இதன் தலைமையகம் தற்சமயம் தில்லியில் இயங்கி வருகின்றது. இந்தியா முழுவதும் வானிலை சார்ந்த முன் அறிவிப்புகளை வழங்கி வரும் வானிலை மையமானது காலத்திற்கு ஏற்ப அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இதனை செயல்படுத்தி வருகின்றது.

அதன் படி சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் ரமணன் தமிழகத்தில் மழை சார்ந்த முன் அறிவிப்புகளை வழங்க பெரிதும் நம்புவதோடு, பயன்படுத்தியும் வரும் சில தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

மூன்று அம்சங்கள்
பொதுவாக வானிலை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்புகள் மூன்று அம்சங்களை சார்ந்தே தீர்மாணிக்கப்படுகின்றன. மேற்பரப்பு, மேல் காற்று மற்றும் வெளியிடம் என மூன்றின் தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே வானிலை சார்ந்த அறிவிப்புகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த அம்சங்களை கணிக்க வானிலை ஆய்வு மையமானது சில தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துகின்றன.

மேற்பரப்பு நிலவரம்
மாக்சிமம் மற்றும் மினிமம் தெர்மோமீட்டர் (உஷ்ணமனி),
அனிமோமீட்டர் அல்லது வின்டு வேன்,
பல்பு தெர்மோமீட்டர்,
மழை தரமதிப்பு கருவி மற்றும் பாரோமீட்டர் போன்ற கருவிகளை வேற்பரப்பு நிலவரங்களை பதிவு செய்ய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகின்றது.

வெளியிட நிலவரம்


பொதுவாக வானிலை விண்கலங்கள் வெளியிட நிலவரங்களை பதிவு செய்கின்றன. இவை தரை மற்றும் வான்வெளி என இரு மட்டங்களிலும் வானிலை நிலவரங்களை பதிவு செய்கின்றன.

கருவிகள்


மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கருவிகளை பயன்படுத்தி வாண்வெளியில் காற்றின் வெப்பநிலை, காற்றின் எடை, காற்றின் திசை உள்ளிட்டவைகளை பதிவு செய்து இவை வானிலை அறிவிப்புகள் வெளியிட பயன்படுத்தப்படுகின்றன. மேலும் எவ்வளது செ.மீ மழையின் பொழிந்துள்ளது என்ற அளவினை கணக்கிட ரெயின் காஜ் எனப்படும் மழை தரமதிப்பு கருவி பயன்படுத்தப்படுகின்றன.

வரைபடம்


வானிலை சார்ந்த பல்வேறு பதிவுகளை கொண்டு வரைபடம், விளக்கப்படம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு அதன் பின் தான் வானிலை அறிவிப்புகளை ரமணன் நமக்கு வழங்குகின்றார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-இளையராஜா

கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தொடங்கி தயாரித்த ராஜபார்வை படத்திலிருந்து, 2005-ம் ஆண்டு அவர் தயாரித்து நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் வரை அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.

அதன் பிறகு உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 நான்கு படங்களுக்கும் ஜிப்ரான்தான் இசை அமைத்தார்.

தற்போது கமல் அடுத்து தயாரித்து நடிக்கும் புதிய படமான அப்பா அம்மா விளையாட்டு படத்திற்காக மீண்டும் இளையராஜா இசையமைக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

           அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.

திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.

இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவைப்படுவதெல்லாம், அதனை அடையாளம் கண்டு கொள்கிற திறமை மட்டுமே. ஷங்கரின் முதல்வன் படம் இதற்குச் சிறந்த உதாரணம்.

ஷங்கர் படங்களில் இந்தியனும், முதல்வன் திரைப்படமும் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படுபவை. இரண்டுமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து உருவானவை. அதில் முதல்வன் படத்தின் கதை கிடைத்தது ஒரு சுவாரஸியமான சம்பவம்.

ஜீன்ஸ் படம் சுமாராக போன பிறகு ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய நிலை ஷங்கருக்கு. அவர் விரும்பும் சமூக சீர்கேட்டை சரி செய்யும் ஹீரோ கதை யாரிடமும் இல்லை. கதையைப் பிடிங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சுஜாதா சொல்லிவிட்டார். எப்படி புரண்டுப் பார்த்தும் கதை அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

 வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எதுவும் நகரவில்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு நகரத்தின் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது அந்த செய்தியில் உள்ளது. ஒருநாள் மேயராகிறவர், ஒரு பில்டிங்கையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னத்தான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பிளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?

உடனே சுஜாதாவுக்கு போன் பறக்கிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒத்துக் கொண்டால், தேர்தலில் நிற்காமலேயே ஒருவரை ஒருநாள் முதல்வராக்கலாம் என்கிறார் சுஜாதா. சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சுஜாதா சொல்லி முடித்ததும் கதை தயார் என்கிறார் ஷங்கர்.

ஒருவனை ஏன் அனைத்து எம்எல்ஏ க்களும் சேர்ந்து முதல்வராக்க வேண்டும்? அப்படி முதல்வராகும் அவன் ஒருநாளில் என்னென்ன செய்ய முடியும்?

அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் முதல்வன் என்ற மாபெரும் வெற்றிப்படம்.

பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இதேபோல் ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்துக் கொண்டதே.

நீதி - செய்தித்தாளின் சின்னச் செய்திகளிலிருந்தும் ஒரு திரைப்படத்துக்கான கதை கிடைக்கும்.


லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.

இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும்.

லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.

வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது.

ஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம். அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களை சென்றடையும் என, இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள வெல்மினி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் சொலாங்கி தெரிவித்தார்.

வைஃபை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பாவிக்கப்படுவதால் அவை மருத்துவமனைகள், விமானங்கள், மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆதலால், லைஃபை தொழில்நுட்பம் மூலமாக, இந்தக் குறையை போக்கிக் கொள்ளலாம் என, எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட்டு ஹாஸ் 2011 இல் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் லைஃபை என்ற தொழில்நுட்பத்தை முதல் முறையாக தெரிவித்திருந்தார்.

வீட்டில் உள்ள வைஃபை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பாவிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள் ஒரு காரணம்.

டிசம்பர் மாதத்தில், குறிப்பாக அனேகமானோரின் வீடுகளில் வைஃபை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதற்கு காரணம் வீடுகளில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின்குழிழ்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொலைத் தொடர்புகளின் தங்களைக் கண்காணிக்கும் அமைப்பான ஓஃப்கொம் வைஃபையின் உறுதித்தன்மையை பரிசீலிக்க செயலிகளையும் உருவாக்கியுள்ளது.

பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, உலகின் காடுகளை பாதுகாப்பது பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் நடக்கின்றன.

சீனா இப்போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு பெரிய திட்டங்களை கொண்டுவருகின்றது.

காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!

அதர்வா நடிக்கும் ‘ஈட்டி’ படத்தை ரவி அரசு என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தடை ஓட்ட பந்தய வீரராக நடித்திருக்கிறார்.

முறையான பயிற்சி இல்லாமல் தடை ஓட்ட பந்தய வீரராக நடிக்க முடியாது என்பதற்காக அதர்வா, இப்படத்தில் நடிப்பதற்கு முன் சுமார் மூன்று மாதங்கள் நாகராஜ் என்பவரிடம் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

நாகராஜ் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய தடை ஓட்டப் பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளித்தவராம். இப்படத்தில் இறுதி காட்சியில் நடைபெறும் தடை ஓட்ட போட்டியை பெங்களூரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரவி அரசு.

இந்த போட்டியில் அதர்வாவுடன் ஓடிய சக வீரர்களாக காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட நிஜ வீரர்களையே நடிக்க வைத்துள்ளனர். இந்த காட்சி கண்டிப்பாக ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

‘ஈட்டி’ படம் வருகிற டிசம்பர் 4-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. காதல், ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், சஸ்பென்ஸ் என அத்தனை விஷயங்களும் இப்படத்தில் இருக்கிறது.

குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு

கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்

எந்திரன்-2 அறிவிப்பு எப்போது, பட்ஜெட் எவ்வளவு? வெளிவந்த தகவல்

கபாலி படத்தை ரஜினி ஒப்புக் கொள்வதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வரும் விஷயம், ஷங்கர் இயக்கத்தில் அவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என்பது.

ஆனால் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். காரணம், அதற்குள் கபாலி படம் தொடங்கிவிட்டார் ரஜினி. இந்தப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது எந்திரன் 2 ஐ அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதாக இல்லை. இந்தப் படம் குறித்து மீடியாவில் வெளியாகும் செய்திகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர். ஒருமுறை ஷங்கரே, 'அவசரப்பட வேண்டாம். நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என்று மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், எந்திரன் 2-ன் மேக்கப் டெஸ்ட் மற்றும் ஆரம்பப் பணிகளில் பங்கேற் சில தினங்களுக்கு முன் ரஜினி அமெரிக்கா சென்றார். இன்றோ நாளையோ அவர் சென்னை திரும்புகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்தார்.எந்திரன் 2-ன் தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன் நடிக்கவிருக்கும் அர்னால்ட் என பலரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இப்போது இந்தப் படத்தை கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தி"லைகா புரொடக்ஷன்ஸ் + சூப்பர் ஸ்டார் + ஷங்கர்...

எங்களின் அடுத்த படத்தை இந்தியாவின் மிகப் பெரிய படமாகத் தர தயாராகிவிட்டோம்" என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்குவை விரட்டும் தற்காப்பு முறைகள்

 மழைநீர் தேங்கி அதிக தொற்று நோய்களை ஏற்படுத்தும். டெங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைத்தான் முதலில் தள்ளிவைக்க வேண்டும்.

நாம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது, கொசுக்களை ஒழிக்கத் துளசி, நொச்சிச் செடிகளை வளர்ப்பது, மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவு உண்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

டெங்கு
டெங்கு ஒன்றும் தீர்க்க முடியாத நோயல்ல. நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு முறைகளாக, நிலவேம்புக் குடிநீர் குடித்துவரலாம். இதனுடன் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு சாறும் பருகலாம்.

நிலவேம்பு
நிலவேம்பு குடிநீரை 30-50 மி.லி.., குடிக்க வேண்டும். கசப்பு சுவையைக் குறைக்கச் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

பப்பாளி இலை சாறு
மருத்துவக் குணங்கள் நிறைந்த பப்பாளிப் பழங்களைப் போலவே,  பப்பாளி இலைகளும் மகத்துவம் நிரம்பியவைதான்.

தயாரிக்கும் முறை
பப்பாளி இலைகளை நன்றாகக் கழுவி, மைபோல அரைத்து, சாறு பிழிந்து வடிகட்டி, சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. அளவு கொடுக்கலாம்.

மலைவேம்பு
மலைவெப்பிலைக்கு ஜூரம் அகற்றி, புழுக்கொல்லி, சிறுநீர் பொருக்கும் தன்மை உண்டு. பப்பாளி இலை சாறு தயாரிப்பதை போலவே இதையும் தயாரித்துக் கொள்ளலாம்.

நோய்கள் ஏற்படாமல் தடுக்க, முதலில் தூய்மையான சுற்றுசூழலை உருவாக்க முயற்ச்சிப்போம்.

இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்

 தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்காக படம் பார்ப்பது மிகவும் அரிது. அதை முறியடித்த சில நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். சோலோ ஹீரோயினாக அருந்ததி, பஞ்சமுகி, ருத்ரமாதேவி என ஹாட்ரிக் ஹிட் அடித்து அடுத்து இஞ்சி இடுப்பழியாக களம் இறங்கியுள்ளார்.

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் தான் படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி நடிப்பார்கள். அவர்களுக்கே சவால் விடும் வகையில் அனுஷ்கா இப்படத்திற்காக 25 கிலோவிற்கு மேல் ஏற்றியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கில் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

கதை :

தான் எப்படி இருக்கிறாரோ அதுவே சந்தோஷம் என வாழ்ந்து வரும் ஸ்வீடி அனுஷ்காவிற்க்கு ஆர்யாவுடன் ஒருதலை காதல் தோல்வியினால் மனமுடைந்து தன் உடல் எடைதான் காரணம் என நினைத்து பிரகாஷ் ராஜ் நடத்தும் "சைஸ் ஜீரோ" எனும் பிரபலமான உடல் எடையை குறைக்கும் மையத்துக்கு வறுகிறார்.

பின் நாளில் அங்கு மோசடி தெரியவர மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த ஆர்யாவின் உதவியோடு பல முயற்சிகள் செய்கிறார். அந்த சமயத்தில் எற்கனவவே மற்றொருவருடன் காதலில் இருக்கும் ஆர்யாவிற்கும் அனுஷ்கா மீது காதல் வருகிறது. பின் அனுஷ்காவின் முயற்சிகள் என்னவாயின, ஆர்யாவுடனான காதல் என்னவானது என்பதே மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

படம் மொத்தமும் அனுஷ்காவை நம்பிதான் நகர்கிறது. ஆண்கள் ( கதா நாயகர்கள்) மட்டுமே உடலை வருத்தி நடிக்க முடியும் என்பதை பொய்யாக்கி காட்டியிருக்கும் அனுஷ்காவை எப்படி பாராட்டினாலும் தகும். முதல் பாதியில் " so cute " என சொல்லவைக்கும் இவரின் கதாப்பாத்திரம் பிற்பாதியில் நவரசங்களையும் அள்ளி தெழிக்கிறது.

ஆவணப்பட இயக்குனராக வரும் ஆர்யாவிற்கு அனுஷ்காவின் துணை கதாபாத்திரம் அவ்வளவே ஆனால் இந்த கதாப்பாத்திரத்தை. கொஞ்சம் நேரம் வந்தாலும் " செல்லம்.. i love u" என சொல்ல வைக்கிறார் வில்லன் பிரகாஷ் ராஜ். ஊர்வசி தன் எதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மாஸ்டார் பரத் கிடைத்த இடத்தில் கில்லி ஆடிவிட்டீர் போங்கோ.

என்னதான் படம் தமிழிலும் வெளியாகிறது என சொன்னாலும் பல இடங்களில் டப்பிங் படம் பார்ப்பது போல் தான் உள்ளது.

முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து பார்க்கிறது. கண்ணில் பட்ட தூசியை ஊதி விட்டால் காதல் , தாங்கி பிடித்தால் காதல் என்பதெல்லாம் அதே பழைய மாவை அரைத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் குறிக்கோள் பெரிதா காதல் பெரிதா என்பதில் இயக்குனரின் குழப்பம் படத்திற்க்கு பின்னைடைவை தந்துள்ளது .

நிரோவ் ஷாவின் ஒளிப்பதிவு தான் படத்தின் தூணே. அவ்வளவு அழகான காட்சியமைப்புகள் பாராட்டுக்களை அள்ளி செல்கின்றது அது போல் vfx பிரமாதம். ஆனால் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டது. கீரவாணியின் பாடல்கள் ரசிக்கும் விதம் பிண்ணனி இசை படம் நகர உதவியுள்ளது.

    க்ளாப்ஸ்:
    படத்தின் காட்சியமைப்பு , அனுஷ்காவின் நடிப்பு.
    பல்ப்ஸ் :
    பார்த்து பழகிய அதே பழைய காட்சிகள். சுவாரஸ்யம் அற்ற இரண்டாம் பாதி.
    மொத்தத்தில் இஞ்சி இடுப்பழகி One Woman Show