Monday, December 7, 2015

தாரை தப்பட்டையிலும் பாலா பிராண்ட் ஹீரோவா?


 பாலா படங்களின் ஹீரோக்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. அழுக்கு உடை, கரைபடிந்த பற்கள், நீண்ட தலைமுடி, ஆக்ரோஷமான கோபம். இதுதான் பாலா பட ஹீரோக்களின் தோற்றம். பாலாவின் ஹீரோ பாத்திர படைப்புகள் யதார்தத்திலிருந்து விலகி நிற்பவை என்ற விமர்சனம் உண்டு.

சேது படத்தில் தலையில் அடிபட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவாக விக்ரம் நடித்தார், அதன் பிறகு பிதாமகன் படத்திலும் அழுக்கு உடை கறைபடிந்த பற்களுடன் வெட்டியானாக நடித்தார். நந்தா படத்தில் சூர்யா பூனைக்கண் குட்டை தலைமுடியென தாதாவாக நடித்தார். நான் கடவுள் படத்தில் ஆர்யா நீண்ட சடாமுடி, கஞ்சா புகைக்கும் வாய், அழுக்குப்படிந்த முகம் என அகோரியாக நடித்தார். பரதேசி படத்தில் அதர்வா இதுவரை யாரும் வைத்திராத சிகை அலங்காரத்துடன் நடித்தார். இப்படி பாலாவின் படங்கள் அனைத்திலும் ஹீரோக்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது சமூகத்தில் அரிதாக காணப்படும் மனிதர்களின் கதைகளை பாலா படமாக்கி வந்திருக்கிறார்.

தாரை தப்பட்டை தஞ்சை பகுதியில் வாழ்ந்து வரும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை சொல்கிற படம். இது பாலா படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றமாதிரிதான் படத்தின் போட்டோக்களும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வரும் சசிகுமாரின் ஆக்ரோஷ படங்கள் இதுவும் பாலாவின் வழக்கமான ஹீரோ உருவாக்கமோ என்று எண்ணுகிற அளவிற்கு இருக்கிறது. என்றாலும் எதையும் படம் வெளிவந்த பிறகே அறுதியிட்டு கூறமுடியும்.

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் 'பீதி'யும் தமிழ் வலைப் பதிவரின் ஆறுதல் விளக்கமும்


மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு.

சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிகாரபூர்வ வானிலை மைய எச்சரிக்கைகள் தவிர, பிபிசி வானிலை முன்னறிவிப்பும் தன் பங்குக்கு மக்களிடையே கணிசமாக கவனத்தைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கி சென்னையில் கனமழை மீண்டும் புரட்டியெடுக்கப்படவுள்ளதாக பிபிசி முன்னெச்சரிக்கையில் விளக்கப்படத்துடன், அதன் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்ட அந்த ட்வீட், தமிழக இணையவாசிகளிடையே பெரும் பீதியை உண்டாக்கின.

இதையடுத்து, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை நடத்திவரும் பிரபல தமிழ் வானிலைப் பதிவர், பிபிசி கணிப்புகளின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

பிரிட்டனில் யுனைடெட் கிங்டம் வானிலை கணித மாதிரியைக் கடைபிடித்து முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உலக வானிலை முன்னெச்சரிக்கை மையம் (GFS) மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம் ((ECMWF) ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பிரிட்டன் வானிலை மையம் 3-ம் நிலையில் உள்ளது.

பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில் மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில் கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான மழை என்பார்கள்.

இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை (கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே காண்பிக்கிறது. எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும். இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும் காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும் உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற கேள்வி எழுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.

நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல் நாம் நம் வேலையை கவனிப்போம்.

நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனை பொறுத்தவரையில், தமிழ் இணைய உலகில் மிகவும் பிரபலமான வானிலை முன்னறிவிப்பு வலைப்பதிவர். சமீப நாட்களில் இவரது முன்னறிவிப்புகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. தற்போதைய நிலையில், இவரது பக்கத்தை 53 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இணைப்பு: https://www.facebook.com/tamilnaduweatherman

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.

சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர். சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எல்லாம் உண்டு. அவர்கள் இந்த வெள்ள நிவாரணம் எதிலும் ஈடுபட்டதாக தகவலே இல்லை. தலைவர் மாதிரியே இவர்களும் அமைதியாகிவிட்டனர்.

அதன் பிறகு இந்த நடிகர் அவ்வளவு தந்தார், அந்த நடிகர் இவ்வளவு தந்தார் என்று அளந்துவிட்டார்கள் அவரவர் ரசிகர்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் புண்ணியத்தால் வழங்காத பணமெல்லாம் நிவாரண நிதியாகக் குவிந்ததுதான் சோகம்.

நடிகர் விஜய் ரூ 5 கோடியுடன் காத்திருக்கிறார், தன் கல்யாண மண்டபங்களையெல்லாம் மக்களுக்கு திறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல் பரப்பினர். விசாரித்ததில் அவர் எந்த நிதியும் தரவில்லை மண்டபங்களையும் திறக்கவில்லை என தெரிய வந்தது. அதுவும் அந்த தேதிகளில் அந்த மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.

அடுத்து அஜீத் ரூ 60 லட்சம் அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டைக் கூட மக்களுக்காக திறந்து வைத்தார் என்று றெக்கை கட்டிப் பறந்தது இன்னொரு செய்தி. ஆனால் அவரும் அப்படி எதுவும் தரவில்லையாம். பெருமழை நாளன்று அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்.

கமல் எந்த நிதியும் வழங்கவில்லை. இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார் அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டையிட்டு கொண்டது தான் மிச்சம்.

எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்ததா ?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்று அப்போதே ஷங்கர் கூறி இருந்தார் .

இந்நிலையில் எந்திரன் 2 வை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் 300 கோடி ரூபாயில் செல்வவில் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் மிக பெரியஅளவில் ஏவிம்-மில் எந்திரன்2 படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்புநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டு அலுவலகத்தில் பூஜை போட்டு மிக எளிமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களாம்.

இன்று பூஜை அதைத் தொடர்ந்து பதினான்காம்தேதி முதல் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருந்தார்களாம். இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் கடந்த பல நாட்களாகவே நடந்துவருகிறது. மழை நிலவரத்தையொட்டி பதினான்காம்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் அல்லது பொங்கல் கழித்து, ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

தந்தை ஓ.பி.எஸ் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறாரே..!

தந்தை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் படத்தை சட்டைப்பையில் வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் கட்-அவுட் வைத்து நிவாரண உதவி செய்கிறாராம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் நிவாரண உதவி பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் கலாட்டா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலாட்டா செய்வோர் பற்றி புகார் தெரிவிக்க, 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய தொலைபேசி எண்களிலும், info@aiadmk.com என்ற இ-மெயில் முகவரியிலும், @aiadmkofficial என்ற டிவிட்டர் அக்கவுண்டிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

பொதுமக்களிடம் பிரச்சினை செய்ததாக இதுவரை, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கல் கூறுகின்றன.

இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயலலிதா கட்-அவுட்டை நிறுவி, அதன் அருகே நின்று நிவாரணம் கொடுக்கும் படம் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. தந்தை, ஓ.பி.எஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா போட்டோ வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒருபடி மேலே போய்விட்டார் என்கிறார்கள் வலைவாசிகள்.

தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து!


ஆர்மோனிய பொட்டியில் நாலு கட்டையை உருவிட்டு ‘இந்தாங்க…’ என்று கொடுத்தால் கூட அதிலும் அசத்தலாக ஒரு ட்யூன் போட்டுக் கொடுப்பார் தேவா. யாழினிது, குழலினிது, தேனினிது, தேவா இனிது என்று வரிசைப்படுத்துகிற அளவுக்கு நல்ல மனுஷர். ‘கொடுக்கறதை வாங்கிக்குங்க’ என்று வற்புறுத்துகிற இசையமைப்பாளர்கள் மத்தியில், ‘கேளுங்க கொடுக்கிறேன்’ என்கிற தாராள மனசு அவருக்கு. ‘இந்த பாட்டை அந்த பாட்டுல மிக்ஸ் பண்ணி, அந்த சந்தத்தை இந்த சந்தத்துல கலந்து கொடுத்தா நல்லாயிருக்குமா?’ என்று சங்கதீம் தெரியாத தற்குறி கேட்டாலும், ‘அதுக்கென்ன ட்ரை பண்ணுவோமே?’ என்பார் மெர்க்குரி பல்பு போல முகத்தை வைத்துக் கொண்டு.

அதற்காக கலைவாணியை கள்ளத்தோணியில் சென்று சந்தித்தவரல்ல அவர். இசைஞானி இளையராஜாவின் ட்யூன் எது, தேவாவின் ட்யூன் எது என்கிற திகைப்பை ரசிகனுக்கு ஏற்படுத்தி, பல முறை தன் ட்யூனை முணுமுணுக்க வைக்கிற அளவுக்கு தேர்ந்த இசைத்தோணிதான் அவர். அதனால்தான் ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று அவரால் டாப் நட்சத்திரங்களை தன் வெள்ளை ஜிப்பா பைக்குள் போட்டுக் கொண்டு நடக்க முடிந்தது. வளைஞ்சு கொடுக்கறதெல்லாம் ரப்பர்னா, தேவாவும் ரப்பர்தான். தழைஞ்சு கொடுப்பதெல்லாம் நாணல் என்றால் தேவாவும் நாணல்தான். அசைஞ்சு கொடுப்பதெல்லாம் காற்று என்றால் தேவாவும் காற்றுதான். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், முப்பத்திரண்டு பற்களில் முப்பதுக்கு ‘சுளுக்கு’ நிச்சயம். முப்பது வருஷ சோகத்தையும் முப்பது நிமிஷங்களில் கரைத்துவிடுகிற அற்புத மூலிகை அவரது ஹாஸ்யம்.



சினிமா ஓடுகிறதோ, இல்லையோ? கலெக்ஷ்ன் ஆகிறதோ, இல்லையோ? படம் எடுத்தவருக்கு துட்டு தேறியதோ, இல்லையோ? ஆனால் சம்பந்தப்பட்ட படங்களுக்கும் படத்தில் நடித்தவர்களுக்கும் ஜனவரி ஒண்ணாந்தேதி அன்று ஒரு சடங்கு இருக்கும். அந்த பைன் ஆர்ட்ஸ். இந்த பைன் ஆர்ட்ஸ். அந்த நிறுவனம் இந்த நிறுவனம் என்று சுமார் ஒரு டசன் அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு விருதுகள் கொடுப்பார்கள். மொத்தமா போட்டாக் கூட நாலு பேரீச்சம் பழத்துக்கு உதவாத அந்த விருதுகளை வழங்க, இன்விடேஷன் என்ன? மாலைகள் என்ன? சால்வைகள் என்ன? என்ட்ரி பாஸ் என்ன? என்று அமர்க்களப்படுத்துவார்கள். அதுபோன்ற நேரங்களில் ‘தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்’ என்று அள்ளிக் கொண்டு போக ஒரு குரூப் தயாராக இருக்கும். ‘பழகுனவங்க கூப்பிடுறாங்க. போகலேன்னா மனசு கஷ்டப்படுவாங்க’ என்பதற்காகவே இஷ்டப்பட்டு கிளம்புவார் தேவாவும்.

அப்படி போன இடத்தில்தான் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்திலிருக்கும் ஒருவர் தேவாவின் மனசை இன்னும் நோகடித்து அனுப்பினார். சோசியத்துல அனுகூல சத்ரு என்றொரு பதம் உண்டு. ‘சொந்த வீட்ல இருக்காரு. ஆனாலும் வீட்டை சேதப்படுத்தாம போக மாட்டாரு’ என்பார்கள் சில கிரகங்களை. அப்படியொரு கிரகம் தேவாவையும் பிடித்து ஆட்டியது ஒரு விழாவில்.

இதுபோன்ற மேதைகளும் அறிஞர்களும் கலந்துக்கிற விழான்னா ஆர்வமா போவார் தேவா. அவங்க அனுபவத்தை அங்க சொல்வாங்க. அதுல ஏதாவது ஒரு விஷயம் நமக்கு உந்துதலா இருக்கும்ல. அதுக்காகதான் நான் மறுக்காம போற வழக்கத்தை வச்சுருக்கேன் என்பார்.

ஒருமுறை அப்படி போனப்பதான், ஒரு அறிஞர் தேவாவை புகழ்ந்து பேச எழுந்தார். ‘தேவா இருக்காரே… அற்புதமான மியூசிக் டைரக்டர். அவர் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் தேசிய கீதம். ஒரு படத்துல அவர் ஒரு பாட்டு போட்ருப்பாரு பாருங்க. அடடா…’ன்னு சொல்லிட்டு பாடவே ஆரம்பித்துவிட்டார். அவரு தொண்டையை செருமிகிட்டு பாட ஆரம்பிக்கும்போதே என்ன பாட்டா இருக்கும்னு ஆர்வமா காதை தீட்டிகிட்டு கேட்க தயாராகிவிட்டார் தேவா. அந்த கொடுமைய ஏன் கேட்கிறீங்க? இசைஞானி இளையராஜா இசையமைச்ச சூப்பர் ஹிட் பாட்டான ‘என்னை தாலாட்ட வருவாளா’ன்னு பாட ஆரம்பிச்சுட்டாரு. ஜனங்களும் புரியாம பயங்கரமா கை தட்டுறாங்க. தேவாவுக்கு கை காலலெல்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு’.

உடனே ‘அது நான் இசையமைச்ச பாட்டு இல்லே’ன்னு சொல்ல நினைச்சு எழுந்துவிட்டார். அவரு விட்டால்தானே? ‘சார்… உட்காருங்க. என்ன சொல்ல வருவீங்கன்னு எனக்கு தெரியும். அது என்னோட பாட்டு இல்லேன்னு சொல்வீங்க. அவ்வளவுதானே? அவர் இசையமைச்ச பாட்டை கூட என்னுது இல்ல. எல்லாம் கலைவாணி சரஸ்வதி கொடுத்தது’ன்னு சொல்லிடுவாரு. அந்தளவுக்கு தன்னடக்கம். அதான் தேவா சார்’ என்றார்.

இன்னொரு பாட்டு கேளுங்க. என்று அவர் இன்னொரு பாட்டை பாட்டை எடுத்துவிடுறார். கடவுளே… அதுவும் தேவா பாட்டு இல்ல. மறுக்கறதுக்காக இவர் எழும் போதெல்லாம், சும்மா உட்காருங்க சார்… போதும் உங்க தன்னடக்கம்’ என்று அடக்கி அடக்கியே நெருக்கி தள்ளினார் . இப்படி வரிசையா நாலு பாட்டு பாடுனாரு. நாலும் தேவாவுடையது இல்ல.

இந்த தர்ம சங்கட அனுபவத்தை நீங்க தேவாவே சொல்லி கேட்க வேண்டும்! அதுதான் தேவானுபவம்!

தி.நகரில் பெரிய பங்களா. சொந்தமாக பிரமாண்டமான ஸ்டூடியோ. படகு கார் என்றெல்லாம் தேவா, ‘ராஜ’தேவாவாக இருந்தாலும், பழசை மறக்கிற வழக்கம் அவருக்கு இல்லை. இளம் வயது கஷ்டங்களை அவருக்கேயுரிய நகைச்சுவையோடு அவர் சொன்னால், ஒரு முறை காலச் சக்கரத்தில் ஏறி அவரோடு ட்ரிப் அடித்த சுகம் கிடைக்கும்.

நான் துர்தர்ஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்த நேரம். மைலாப்பூர்ல இருந்து சேப்பாக்கத்துக்கு ஒரு ஓல்டு ஸ்கூட்டர்லதான் போவேன். தினமும் பதினாறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன். அப்ப ஒரு லிட்டர் ரேட் அதுதான். அதுக்கு மேல காசும் இருக்காது. தினமும் பதினாறுக்கு மேல போட்டதில்ல என்பதால், என்னை பார்த்தாலே பங்க் பசங்க, ‘டேய்… பதினார்ரூவா வருதுரா’ன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அவமானம் புடுங்கி திங்கும். ஒரு நாளாவது அஞ்சு லிட்டர் பெட்ரோலை மொத்தமா போட்டு இவனுங்க மூக்கை உடைக்கணும்னு ஆத்திரமா வரும். ஆனால் பொருளாதாரம் பூதாகாரமா இருக்கும். முடியாது.

பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒரு தடவ 500 ரூபா கடன் வாங்கிட்டு கௌம்பிட்டேன். பங்க்ல நுழையும்போதே ‘டேய்… பதினார்ரூவாடா’ன்னா ஒருத்தன். இருடி இரு… இன்னைக்கு இருக்கு உன் மூக்குக்கு பிளாஸ்த்ரின்னு நினைச்சுகிட்டு ஸ்டைலா வண்டிய நிறுத்துனேன். அவன் பட்டனை அழுத்துறதுக்கு முன்னாடியே ‘தம்பி… டேங்க்கை ஃபில் பண்ணு’ன்னு சொல்லிட்டு அவன் முகத்தை பார்க்குறேன்… பய அசந்துட்டான். இருந்தாலும், ‘சார் வேணாம் சார். வழக்கமா என்ன போடுவீங்களோ, அதை மட்டும் போடுங்க’ன்றான். ‘இல்லப்பா. காசு இருக்கு. ந்தா பாரு’ என்று 500 ரூபாயை எடுத்து நீட்டுறேன். அவன் விட்றதா இல்ல. ‘வேணாம் சார். சொன்னா கேளுங்க’ன்றான்.

‘தம்பி… நான்தான் பணம் இருக்குன்னு சொல்றேன்ல? நீ தைரியமா போடு’ன்னு நான் பிடிவாதம் பண்றேன். அந்த தம்பி ஒரு பதிலை சொல்லுச்சு பாருங்க. நான் துடிச்சு போயிட்டேன்.

‘சார்… வருஷக்கணக்கா பதினாறு ரூபாயை தாண்டி நீங்க பெட்ரோல் போட்டதேயில்ல. டேங்க்ல அந்த அளவுக்கு மேல இருக்குற இடமெல்லாம் துரு பிடிச்சு போயிருக்கும். இப்ப பெட்ரோலை ஃபுல்லா போட்டா அந்த துருவெல்லாம் அப்படியே ட்யூப் வழியா கார்ப்பரேட்டருக்கு போய் அடைச்சுரும். அதுக்காகதான் சொல்றேன். வேணாம்’னான். அடப்பாவி… ஒரு மனுஷனை கேவலப்படுத்த எப்படியெல்லாம் ட்யூஷன் படிச்சுட்டு வர்றானுங்கன்னு நினைச்சு நான் ஆடிப்போயிட்டேன்!



தேவா என்கிற சமாதானப்புறா, ‘புறா ஃபிரை’ ஆன கதை ஒன்றும் இருக்கிறது. அது ஹன்ட்ரண்ட் பர்சென்ட் சிரிப்பு.

வாலியும் வைரமுத்துவும் அவரது இசைக்கு பாட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தெரியாமல் அவரையும், அவருக்கு தெரியாமல் இவரையும் எழுத வைப்பாராம். ஏன்? ரெண்டு பேருக்குமே மயிரிழை அளவுக்கு ஈகோ ஓடிய காலம் அது. வைரமுத்துவை காலையில் வரச்சொல்லிவிட்டார் தேவா. அவரும் வந்து விட்டார். முதல் மாடியில் கம்போசிங். பாட்டும் ட்யூனும், பன்னும் டீயும்போல மிக்ஸ் ஆகுற நேரத்தில்தான், தேவாவை வெக்ஸ் ஆக்குகிற செய்தி வந்தது. அவரது உதவியாளர் அப்படியே நைசாக வந்து தேவாவின் காதில் கிசுகிசுத்தார். சார்…. கீழே வாலி சார் வந்துருக்காரு. வரச்சொன்னீங்களாமே?

‘அவரை மதியானம்ல வரச்சொன்னோம். இதுவேற வம்பாப் போச்சே’ என்று மிரண்ட தேவா, முன்னால் அமர்ந்திருக்கும் வைரமுத்துவிடம், ‘சார்… நீங்க எழுதிகிட்டேயிருங்க. லேசா வயித்துல வலியிருக்கு. ந்தா வந்துர்றேன் என்று வாசல் வரைக்கும் கேஷுவலாக நடந்துபோய்… அப்புறம் வீறு கொண்டு ஓட ஆரம்பித்தார் கீழே. ‘ஐயா… வாங்க வாங்க. ட்யூன் போட்டுடலாமா?’ என்று கேட்டுக் கொண்டே கீழே தயாராக இருந்த இன்னொரு கீ போர்டில் ட்யூன் போட ஆரம்பித்துவிட்டார். சரியாக ஐந்து நிமிடம். அவர் வரிகளை கோர்க்க ஆரம்பித்த நேரத்தில், ‘ஐயா… எழுதிகிட்டேயிருங்க. நேத்து சாப்பிட்ட சப்பாத்தி ஒத்துக்கல. வந்துர்றேன்’ என்று வாசல் வரைக்கும் அதே நிதான நடை நடந்து அதற்கப்புறம் திடுதிடுவென ஓட ஆரம்பித்தார் மாடிக்கு. அங்கே வரிகளை முடித்திருந்தார் வைரமுத்து.

இப்படி மாறி மாறி ஓடி ஓடியே ஒரே நேரத்தில் இரண்டு பாடல்களை எழுத வைத்து இருவரையும் சந்திக்க விடாமலே அனுப்பிய சாமர்த்தியம் இப்போதுள்ள எந்த இசையமைப்பாளருக்கும் வராது.

தேவாவின் கதைகளை கேட்டால், அது அவரது பாடல்களை விடவும் இனிப்பாக இருக்கும். இசையால் மட்டுமல்ல, குணத்தாலும் அவர் தேனிசைத்தென்றல்தான்!

திருவண்ணாமலையே சிவனானால் நந்தி எங்கே?? அரிய புகைப்படம்..!


திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே??



திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே??




இதோ பாருங்கள் மலையின் முன்


உள்ள நந்தி வடிவம் கொண்ட சிறுபாறை!!!


 

கண் சிவந்த பாரதிராஜா, அகத்தியன் - திறமையால் அசரடித்த கார்த்திக்

இயக்குநர் பாரதிராஜா மற்றும் அகத்தியன் ஆகியோர் தன் மீது கோபத்தில் இருந்த போது, தனது டப்பிங் திறமையால் அசரடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.

சீன் 1: 'நாடோடித் தென்றல்' டப்பிங் விவகாரம்

பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா நடிப்பில் உருவான படம் 'நாடோடித் தென்றல்'. அப்படத்திற்காக கார்த்திக் டப்பிங் மட்டும் பாக்கி இருந்தது. அப்போது கார்த்திக் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருந்தது. டப்பிங் பண்ணுவதற்காக நீண்ட நாட்களாக கார்த்திக்கை படக்குழு கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், கார்த்திக் வரவே இல்லை.

ஒரு நாள் பாரதிராஜா பரணி ஸ்டூடியோவில் பயங்கர கோபமாகி, "இன்று கார்த்திக் வந்து டப்பிங் பேசியே ஆக வேண்டும். நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

பாரதிராஜா கிளம்பிய சில மணித்துளிகளில் கார்த்திக் பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு டப்பிங் பேசலாம் என்று ஆரம்பித்திருக்கிறார். இதை பாரதிராஜாவிடம் படக்குழு தெரிவிக்க, "எங்கேயும் கார்த்திக்கை விட்டு விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பேன்" என்று பதிலளித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்திருக்கிறார் பாரதிராஜா. அதற்குள் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசி முடித்துவிட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தார் கார்த்திக்.

டப்பிங் பேசிய காட்சிகள் அனைத்தையும் பாரதிராஜா பார்த்துவிட்டு கார்த்திக்கிடம், "இந்த திறமை தான் உன்னை இன்னும் திரையுலகில் நீடிக்க வைக்கிறது" என்று மனம்விட்டு பாராட்டினார்.

சீன் 2: 'கோகுலத்தில் சீதை' டப்பிங் விவகாரம்

'கோகுலத்தில் சீதை' படத்துக்கும் நீண்ட நாட்களாக டப்பிங் பேசாமல் இருந்து வந்தார் கார்த்திக். இயக்குநர் அகத்தியன் பயங்கர கோபத்தில் இருந்திருக்கிறார். ஒரு நாள் இரவு 9 மணிக்கு பரணி ஸ்டூடியோவிற்கு வந்தார் கார்த்திக். 'கோகுலத்தில் சீதை' டப்பிங் பேசலாமா? எனக் கேட்டு அப்படத்தை முழுக்க ஓடவிட்டு பார்த்திருக்கிறார். பின்னர் கார்த்திக் "ஒரு மணி நேரம் போன் பேசிவிட்டு வருகிறேன்" என்று கூற, அனைவருமே எங்கேயோ கிளம்ப போகிறார் என்று எண்ணி இருக்கிறார்கள். ஏனென்றால் 'கோகுலத்தில் சீதை' படத்தில் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருப்பதால் இன்று டப்பிங் பேசாமல் ஏமாற்றிவிட்டு கிளம்பி விடுவார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து டப்பிங் அறைக்கு சென்று பேச ஆரம்பித்த கார்த்திக், காலை 8:30 மணி வரை இருந்து, முழுப்படத்தையும் பேசி முடித்துவிட்டார். கார்த்திக்கை கடுமையாக திட்டிவந்த படக்குழு, டப்பிங் பேசி முடித்தவுடன் ஒரே இரவில் முழுப்படமுமா?! என்று மகிழ்ந்து பாராட்டி இருக்கிறது

முட்டைக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன சம்பந்தம்...?

வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.

அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.

முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமமாக சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.