Friday, December 25, 2015

2015 – 'ஹிட்' இசையமைப்பாளர்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காரணமா இல்லையா என்பது குறித்த பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடல்கள் நல்ல ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளர்களின் பின்னணி இசை அவர்களின் திறமைக்கு மணிமகுடமாக விளங்குகிறது.

இன்றைய யு டியூப், சமூக வலைத்தள காலத்தில் ஒரு படத்தின் பாடல்கள் எளிதில் ரசிகர்களிடையே பரவி விடுகின்றன. நல்ல பாடல்களை அவர்கள் வரவேற்கவும் தயங்கியதில்லை, மோசமான பாடல்களை எதிர்க்கவும் அவர்கள் தயங்கியதில்லை.

மொபைல் போன்கள் வரை பாடல்களின் பயன்பாடு அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் நல்ல ‘ஹிட்’ ஆன பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சிலருக்கு படங்களின் வெற்றியும் அவர்களைக் கை கொடுத்து தூக்கி விட்டு விடுகிறது. சிலருக்கு படங்களின் தோல்வி அவர்களை கை விட்டு விடுகிறது. இருந்தாலும் உண்மையான திறமைசாலிகளும், சிறந்த இசைய கொடுப்பவர்களும் ரசிகர்களின் வரவேற்பை நிச்சயம் பிடித்து விடுவார்கள்.

இந்த 2015ம் ஆண்டில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்களில் சராசரியாக ஒரு படத்திற்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 1000 பாடல்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்கள் இன்றைய இளம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த இசையமைப்பாளர்கள், மற்ற இசையமைப்பாளர்களைப் பற்றிய படங்கள், பாடல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்தக் கட்டுரை…

அனிருத்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் அனிருத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் ‘காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடிதான், வேதாளம், தங்கமகன்’ ஆகிய ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘காக்கி சட்டை’ படத்தில் இடம் பெற்ற “காக்கி சட்டை…., காதல் கண் கட்டுதே…, கட்டிக்கிட்…” ஆகிய பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.

‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘தர லோக்கலு…, தப்பாதான் தெரியும்…, டானு டானு…’ ஆகிய பாடல்களும், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் “தங்கமே உன்னை…, நீயும் நானும்.., என்னை மாற்றும் காதலே…கண்ணான கண்ணே…, நானும் ரௌடிதான்…” ஆகிய பாடல்களும், ‘வேதாளம்’ படத்தில் “ஆளுமா டோலுமா…, வீர விநாயகா…” பாடல்களும், ‘தங்க மகன்’ படத்தில் “என்ன சொல்ல…, டக் பக்…, ஜோடி நிலவே…” பாடல்களும் இசை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன.

தான் இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு பாடல்களையாவது ஹிட் ஆக்கி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிருத். இந்த வருடத்தில் அனிருத் தன் படங்களில் வந்த பாடல்களினால் அதிகம் பேசப்பட்டாரோ இல்லையோ, ‘பீப் சாங்’ பாடல் சர்ச்சையில் அதிகம் பேசப்பட்டார்.

டி. இமான்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களக்கு இசையமைத்துள்ளவர்கள் பட்டியலில் அனிருத்துடன் சேர்ந்து இமானும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில் “வலியவன், ரோமியோ ஜுலியட், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாயும் புலி, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

‘வலியவன்’ படத்தில் ‘ஆஹா…காதல் வந்து…, எலோமியா…’ பாடல்கள் மட்டுமே கேட்கும்படியாக அமைந்தது. படமும் வெற்றி பெறாததால் அதுவும் பலரைச் சென்றடையவில்லை. ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் இடம் பெற்ற ‘டண்டணக்கா…’ பாடல் நீதிமன்றம் வரை சென்று வழக்குகளைச் சந்தித்து திரும்பி வந்தது. அந்த ஒரு பாடலே இந்தப் படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது. இந்தப் பாடலுடன் ‘அடியே…இவளே…, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…, தூவானம்…’ ஆகிய பாடல்கள் ரசிக்கும் பாடல்களாக அமைந்தன. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ‘லக்கா மாட்டிக்கிச்சி…, நா ரொம்ப பிஸி…, அடடா ஒண்ணும் சொல்லாத….’ பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தன. ‘பாயும் புலி’ படத்தில் இடம் பெற்ற ‘சிலுக்கு மரமே…’ என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே தொடர்ந்து பல இடங்களில் ஒலித்தது. அந்தப் படத்திற்கு அடையாளமாகவும் இந்தப் பாடல் அமைந்தது. ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் ‘நான் பாய்ஞ்சால்…’ பாடல் மட்டுமே கொண்டாட்டமான பாடலாக அமைந்தது.

இந்த ஆண்டில் இமான் இசையமைத்த படங்களில் ‘ரோமியோ ஜுலியட்’ படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்ததால் கடந்த ஆண்டைப் போல அதிகம் பேசப்படாமல் போய்விட்டார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

2015ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் பட்டியலில் ஜி.வி.பிரகாஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய இசையில “டார்லிங், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜதந்திரம், கொம்பன், காக்கா முட்டை, காவல், இது என்ன மாயம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஈட்டி” ஆகிய 9 படங்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆண்டில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் அறிமுகமாகி இரண்டு வசூல் படங்களில் நடித்தும் விட்டார். ‘டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என இவர் நடித்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இசையைப் பொறுத்தவரையில் ‘டார்லிங்’ படத்தில் இடம் பெற்ற “உன் பார்வை போதும்…, உன் விழிகளில்…., வந்தா மல…, பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. ‘கொம்பன்’ படத்தில் இடம் பெற்ற “கருப்பு நிறத்தழகி…, கம்பிக்கரை வேட்டி…, பாடல்கள் கொண்டாட்டமான பாடல்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன. ‘காக்கா முட்டை’ படத்தில் ‘கருப்பு கருப்பு..’ பாடல் வரவேற்பைப் பெற்ற பாடலாக இருந்தது. ‘இது என்ன மாயம்’ படத்தில் ‘இரவாக நீ…’ பாடல் நல்ல மெலடியாக அமைந்தது. படம் வெற்றி பெறாததால் இப்படத்தின் பாடல்கள் அதிகம் கவனிக்கப்படவில்லை. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா பாடிய ‘முத்தம் கொடுத்த மாயக்காரி…’ வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக ஒலித்துள்ளது. சர்ச்சைக்குரிய ‘பிட்டு படம்டி…’ என்ற பாடலும் இடம் பெற்றதை தற்போது ‘பீப் சாங்’ பாடலுக்கு எழுந்த சர்ச்சைக்கப் பிறகுதான் பலரும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே படத்தில் இடம் பெற்ற ‘என்னாச்சு ஏதாச்சு..’ இனிமையான மெலடியாக அமைந்தது. ‘ஈட்டி’ படத்தில் ‘நான் புடிச்ச மொசக்குட்டியே…’ பாடல் சமீபத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. மற்ற படங்கள் வெற்றி பெறாததால் அந்தப் படங்களின் பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை.

அதிகப் படங்களுக்கு இசையமைத்ததோடு, நாயகனாகவும் இந்த ஆண்டில் அறிமுகமாகி இரண்டிலுமே முத்திரை பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

மேலே குறிப்பிட்ட மூன்று இசையமைப்பாளர்களும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் ஐந்துக்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் சில படங்களில் அவர்களும் ஹிட்டான பாடல்களை அளித்திருக்கிறார்கள்.

அவர்களில் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ‘ஐ, ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ரகுமான் இசையமைத்த இந்த இரண்டு படங்களுமே தமிழ்த் திரையுலகின் இரு பெரும் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இயக்கிய படங்கள். ரகுமானின் முந்தைய ஹிட் பாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களின் பாடல்களின் ஹிட் விகிதம் குறைவுதான் என்பதை அவருடைய ரசிகர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா

யுவன்ஷங்கர் ராஜா இசையில் “வை ராஜா வை, மாஸ், யட்சன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் வெற்றி பெறாமல் பாடல்களும் பெரிய ஹிட் ஆகாமல் யுவனை மீண்டும் எழ வைக்காத படங்களாகவே இவை அமைந்தன.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ‘என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு…’ பாடல் அனைவரையும் உருக வைத்த பாடலாக அமைந்தது. ‘அனேகன்’ படத்தில் இடம் பெற்ற ‘டங்கா மாரி…’ பாடல் இந்த ஆண்டின் அதிரடியான குத்துப் பாடலாக அமைந்தது. ‘நண்பேன்டா’ படத்தில் இடம் பெற்ற ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…’ என்ற நயன்’தாரா’ பாடல் இனிமையாக அமைந்தது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘எனக்குள் ஒருவன், 36 வயதினிலே’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ’36 வயதினிலே’ படம் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதில் ’36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘வாடி ராசாத்தி…’பாடல் ஹிட்டான பாடலாக அமைந்தது. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள ‘கபாலி’ படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த ஆண்டில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார் சந்தோஷ் நாராயணன்.

ஜிப்ரான்

ஜிப்ரான் இசையமைத்து இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்களுமே கமல்ஹாசன் நடித்த படங்கள் மட்டுமே என்பது ஒரு சிறப்பு. ‘உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம்’ ஆகிய கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்குமே அவர் இசையமைத்து கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளரானார். இதில் ‘பாபநாசம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஏய்யா என் கோட்டிக்காரா…’ என்ற பாடல் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பிடித்த பாடலாக அமைந்தது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இந்த ஆண்டின் அறிமுக இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இருக்கிறார். ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை, தனி ஒருவன்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அவற்றில் ‘தனி ஒருவன்’ படத்திற்கு தனி இடமுண்டு. அடுத்த ஆண்டில் இவர் இசையமைப்பதைப் பொறுத்து மற்றவர்களுக்கு போட்டியாகவும் வர வாய்ப்புண்டு.

மேலும் இந்த ஆண்டில் ஓரிரு படங்களக்கு மட்டும் இசையமைத்து அவற்றில் ஓரிரு பாடல்கள் அதிகமாக ரசிக்க வைத்த இசையமைப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் படங்கள் அதிகமான வரவேற்பை பெறாததால் அவர்கள் இசையமைத்த சில நல்ல பாடல்களும் ரசிகர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் அவர்களுக்கும் வரவேற்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை![/justify]

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)



நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!

எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

சிறுநீரகம், சிறுநீரகத்தில் கற்கள் ... என்னென்ன செய்யலாம்..செய்யக்கூடாது..!

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் முலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் முளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.

சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.

சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம்.

சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும்.

பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது.

பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.

கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.

மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த லிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

சிறுநீரகத்தில் கற்கள்

உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்..

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். 1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

'தாரை தப்பட்டை' இசை - பலத்த வரவேற்பைப் பெற்ற இளையராஜா

இளையராஜாவின் இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவர இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் இசை இன்று வெளியானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக இளையராஜாவும், பாலாவும் இந்த இசை வெளியிட்டிற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கும், இசை உரிமையை வாங்கிய கம்பெனியின் யு டியூப் இணையதளத்திலும் பாடல்களை வெளியிட்டனர்.

'தாரை தப்பட்டை' என்றாலே 'அடி கிழியட்டும்' என்பார்கள். அந்த அளவிற்கு இந்த மண்ணின் இசையை மக்கள் ரசிக்கும் அளவிற்கு அடித்துத் தள்ளியிருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவே இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். மோகன்ராஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைத்திருக்கிறார். இதில் திருவாசகப் பாடலான 'பாருருவாய...' என்ற திருவாசகப் பாடலைக் கேட்கும் போது உருக்கி விடுகிறது. 'இடறினும்..' என்று இளையராஜா எழுதி சரத் பாடிய பாடலும் அந்த வரிசையில் இடம் பெறும் மற்றொரு பாடல்.

'நான் கடவுள்' படத்தில் இடம் பெற்ற 'பிச்சைப் பாத்திரம்...' பாடல் போல இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. 'ஆட்டக்காரி மாமன் பொண்ணு...' பாடல் கேட்கும் போதே ஆட வைக்கிறதென்றால், திரையில் பார்க்கும் போது என்ன செய்யும்..?. 'வதன வதன வடிவேலன்...' பாடலும் ரசிகர்களை நிச்சயம் ஆட வைக்கும் என்பது உறுதி.

பாடல்களைப் பாடியுள்ள குரல்கள் ஒவ்வொன்றும் புதிதாக இருப்பது இந்தப் பாடல்களை அதிகம் ரசிக்க வைப்பதற்கு மற்றுமொரு காரணம்.

'தீம் மியூசிக்'கில் கிழி கிழியென அதிரடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியானது முதலே இசை ரசிகர்கள் இளையராஜாவை மீண்டும் ஒரு முறை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழரின் இசை வரும் தமிழர் திருநாளில் தமிழர்கள் இருக்கும் இடமெங்கும் தாரை தப்பட்டையுடன் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெறும் என்பது உறுதி.

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

'பசங்க 2, பூலோகம்' நிலவரம் எப்படி ?

2015ம் ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று 'பசங்க 2, பூலோகம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'பசங்க 2, பூலோகம்' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

'பசங்க' என்ற தரமான படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஆகியோரது கூட்டு முயற்சியில் உருவான 'பசங்க 2' படம் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு தரமான, சிறந்த படமாக அமைந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர், சிறுமியர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு படமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களின் உலகம் என்பது தனி உலகம். அதில் அவர்களை உணர்வு ரீதியாக அவர்களின் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். நல்ல படங்களை நமது ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை, அதே போல் இந்தப் படமும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கியமான படமாக இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இடைவேளைக்குப் பின் படம் கொஞ்சம் தளர்ந்தாலும் அதன் பின் முடிவை நோக்கி செல்லும் போது நெகிழ வைத்து விடுகிறது என்பதே படம் பார்த்த பலரின் கருத்தாக உள்ளது. மெல்ல, மெல்ல அனைத்து ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் எஸ்.வி.ஜனநாதன் வசனத்தில் அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'பூலோகம்'. கடந்த ஆண்டே வர வேண்டிய படம் தாமதமாக வந்தாலும் தடம் பதிக்கும் அளவில் இருப்பதாகவே படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த 'ஐ' படத்திற்கு முன்பாக இந்தப் படம் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. வெறும் கமர்ஷியலாக மட்டுமல்லாமல் கார்ப்பரேட் கம்பெனிகள் மக்களை எப்படியெல்லாம் சுரண்டுகின்றன என்பதை சாதாரண ரசிகர்களுக்கும் புரிய வைக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. அதற்கு எஸ்.பி.ஜனநாதனின் வசனம் அதிரடியாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட படங்களை ரசிகர்கள் வரவேற்றால்தான் நல்ல படங்களும் தொடர்ந்து வெளிவரும் என்ற பாராட்டும் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது.

சீரியசான கதை என்பதால் நகைச்சுவை என்பது படத்தில் இல்லை, பாடல்களுக்கும் முக்கியத்துவமில்லை. இந்த இரண்டு கமர்ஷியல் விஷயங்களைப் படத்தில் தவிர்த்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தள்ளாடும் இந்த பூலோகம் அதன்பின் பரபரப்பை நோக்கி நகர்கிறது.

ரசிகர்களின் வரவேற்பு இந்த இரண்டு படங்களுக்கும் இன்னும் உள்ள விடுமுறை நாட்களில் கிடைக்கும் பட்சத்தில் நல்ல வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது.

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார்.

ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது அரண்மனைச் சேவகர்கள் எதையோ தேடிக் கொண்டு மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.

அந்தச் சேவகர்கள் ஜடிக்கிடம் அவர் வரும் வழியில் ஒரு நாயைக் கண்டாரா என்று கேட்டனர். அந்நாய் மகாராணியினுடையது. அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஜடிக், அவர்களிடம் அந்த நாயைப் பற்றி விவரித்தார். “ஒரு கட்டையான பெண் நாய். காதுகள் கீழே படும்படியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சமீபத்தில்õன் குட்டிகளை ஈன்றது. அதனுடைய முன் வலது கால் சிறிது ஊனமாக இருக்கும்’ என்றார்.

அவர்களும் ஆவலுடன் அந்த நாய் எங்கே சென்றது என்று கேட்கவும் அவர், “எனக்கு அரசியிடம் ஒரு நாய் இருப்பதே தெரியாது. நான் அதைப் பார்த்ததும் இல்லை’ என்றார். அவர்கள் ஏமாற்றமடைந்து நாயைத் தேடுவதைத் தொடர்ந்தனர்.

அதே சமயம் அரசரின் பிரதான குதிரையையும் காணோம். அதைத் தேடியவாறு வந்த சேவர்களும் ஜடிக்கைப் பார்த்து அவரிடம் அரசரின் குதிரையை அவர் பார்த்தாரா என்று வினவினார்.

ஜடிக் சொன்னார். “அந்தக் குதிரை 5 அடி உயரம், வாலின் நீளம் மூன்றரை அடி. நல்ல பாய்ச்சல் குதிரை. வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டது. அதன் சேணம் 23 காரட் தங்கத்தாலானது.’

அவர்களும் மிக ஆர்வத்துடன் அக் குதிரை எந்தப் பக்கம் சென்றது என்று கேட்டார்கள். அவர் குதிரையைப் பார்க்கவில்லை என்று சொல்லவும் அவர்கள் அவரைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்தார்கள். விஷயத்தைக் கேள்வியுற்ற அரசர் ஜடிக்கை சைபீரியாவிற்கு நாடு கடத்தும்படியும், அவர் அபராதமாக 400 அவுன்ஸ் தங்கம் தரவேண்டும் என்றும் தண்டனை கொடுத்தார்.

அப்போது, காணாமற்போன நாயும், அரசரின் குதிரையும் கிடைத்து விட்டதாகத் தகவல் வந்தது. அதனால் ஜடிக் பெற்ற நாடு கடத்தல் தண்டனையை ரத்து செய்து, அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்திட உத்தரவிட்டார.

ஜடிக்கிடம் எப்படி அவரால் காணாமற்போன மிருகங்களை அவ்வளவு துல்லியமாக வர்ணிக்க முடிந்தது என்று அரசர் முதல் அவையில் இருந்த அனைவரும் கேட்டார்கள்.

ஜடிக் சொன்னார்: “நான் சென்று கொண்டிருந்த மணற் பாங்கான சாலையில் ஒரு நாயின் காலடித் தடத்தைக் கண்டேன். அதன் முன்புறத்து வலதுகால் ஊனமாக இருந்ததால் அந்தக் கால் தடம் சரிவர காணப்படவில்லை; அதன் காதுகள் தரையைத் தொட்டுக் கொண்டு தொங்கியவாறு இருந்ததால் அந்தக் காதுகளின் தடயம் மண் பாதையில் தெரிந்தது. அது சமீபத்தில்தான் குட்டிகள் ஈன்றிருந்தபடியால் அதன் மடியும், காம்புகளும் மணலில் கோடாகத் தெரிந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டுதான் என்னால் நாயைப் பற்றிச் சரியாக ஊகித்துக் கூற முடிந்தது.’

“குதிரை விஷயம் என்னவென்றால் நான் சென்று கொண்டிருந்த மண்பாதையின் அகலம் 7 அடி. குதிரை சரியான நாலுகால் பாய்ச்சலில் சென்றதால், அதன் வாலின் அசைவுகளால் சாலையோரம் இருந்த மரங்களில் தூசு இல்லாமல் இருந்தது. அதனால் குதிரையின் வால் மூன்றரை அடி நீளம் என்றேன். சுமார் 5 அடி உயரம் வரை மரங்களின் இலைகள் குதிரையின் தலையில் பட்டு உதிர்ந்திருக்கவே அது 5 அடி உயரம் இருக்கும் என்றேன். அதன் குளம்புகளின் தடங்களில் வெள்ளி ரேகைகள் தென்பட்டதால் அதற்கு வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டு இருக்கும் என்று சொன்னேன். அதனுடைய சேணம் ஒரு பாறையில் கீறிக்கொண்டு சென்றிருந்தது. அதனால் அந்தத் தங்கம் 23 காரட் என்றேன்’ இவ்வாறு அவர் விளக்கம் கூறவும் அரசரும் அவையோரும் அவரது புத்திகூர்மையைப் புகழ்ந்தார்கள்.

ஆனாலும் என்ன! வழக்கை விசாரித்ததற்காக அவரிடமிருந்து 398 அவுன்ஸ் தங்கமும், மீதி 2 அவுன்ஸ் தங்கம் அரண்மனைச் சேவகர்களுக்கு பரிசாகவும் வசூலிக்கப்பட்டது.

ஆக, ஜடிக்கின் மிதமிஞ்சிய புத்திக் கூர்மையால் அவருக்கு 400 அவுன்ஸ் தங்கம் இழப்பு! இதுதான் அவர் கண்ட பலன். தனது புத்திசாலித்தனத்திற்காகத் தன்னையே நொந்து கொண்டார்

எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை செய்பவர்கள்


மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஓருவர் ஆறேழு மாசமா டாக்டரிடம் வந்து
 போயிட்டு இருந்தாரு...

டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டிய
 பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா.
இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு.,


டாக்டர் "எம்பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு
 கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன் ஆனால்
 ஒரு மார்கெட்டிங் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு"
சொல்லிட்டாரு..

டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை
 யார் கல்யாணம் பண்ணாலும் ஒரே மாசத்துல
 செத்துடுவாங்க..

டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு
 கல்யாணம் பண்ணி வைக்கிறாரு..

அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்..
அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்.
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்,
அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...

என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி
 ஆகிடுச்சே.. சரி அந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவனுக்கு மேரேஜ் பண்ணி
 வச்சுடலாம்னு முடிவு பண்ணி..

அவர் கால்ல விழுந்து கெஞ்சி
 மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு... எல்லோரும் அந்த
 அவர் செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...

ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு,
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அந்த சாகலை...
எல்லோருக்கும் ஆச்சரியம்...

செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர்
 சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க...
அந்த பொண்ணு ஜாதகபடி அவள கட்டிகிட்டவன்
 ஒரே மாசத்துல செத்துருவான்னு இருக்கு...
அதனாலதான் நாங்க இங்க இருக்கோம்..

ஆனால் அவருக்கு ஒன்னும் ஆகலையே எப்படி?..

அதற்கு எமன் சொல்றாரு,
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல
 வெயிட் பண்ணிட்டு இருப்பேன்,
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட்
 பண்ணிட்டு இருப்பேன்..
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு
 வந்துடுவேன்..
அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரை
 பிடிச்சிடுவேன்,

ஆனால் இந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவர் இருக்காரே ( எமனே அழறாரு)..
அவரோட டூர் ப்ரோக்ராம்ல நாமக்கல்னு போட்டிருந்தாரு
 அதை நம்பி நான் நாமக்கல்ல வெயிட் பண்ணிட்டு
 இருந்தேன். ஆனா அவரு மேட்டூர்ல வொர்க் பண்ணிட்டு
 இருக்காரு... சரி அடுத்த நாள் ஆத்தூர்னு போட்டிருந்தாப்ல
 நான் ஆத்தூர்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்
 ஆனா சேலத்துல வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல..

டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா
 பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த
 எமனுக்கே எட்டு போட்டு காட்றான்யா எமனே
 தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு..

எமனை மட்டுமில்லை.,
எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை செய்பவர்கள்

சிம்புவுக்கு ஆதரவாக சிவசேனா கட்சி..ஐயா சாமி இதுக்கு ஒரு முடிவில்லையா..?

சிம்புவுக்கு எதிராக பலர் எதிர்ப்பு காட்டி வந்தாலும், தற்போது சிவசேனா கட்சி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

பீப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி இருக்க ஏன் சிம்புவை இப்படி துன்புறுத்துகிறார்கள் என்றனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு முஸ்லீம். இதுவரை கமல் படத்தில் ஆபாசங்கள் இருந்தது இல்லையா?பல படங்களிலும் மோசமான வரிகளில் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுபோன்ற மோசமான விஷயங்களுக்கு குரல் கொடுக்காத பெண் இயக்கம், இதற்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சிம்புவின் குடும்பம் ஒரு ஹிந்து குடும்பம் என்கின்றனர்.

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள்.

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும்.

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும்.

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் அவ்வாறு மேக்-கப் நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது.

மேற்கூறிய விஷயங்களை பெண்கள் தவிர்த்தால் நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்!

ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப்போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

முனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும்? என்கிற மருத்துவரின் கேள்விக்கு உடனடி அவசர விவாதத்துக்குப் பின் டாக்டர் என்று பதில் சொல்கிறார்கள். உடனே அருகிலிருக்கும் சோதிடர் இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு அறுவைசிக்கிச்சை செய்து குழந்தைப்பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது. 

இப்படி வளரும் குழந்தைகள் மிகவும் சுட்டிகளாக இருக்கின்றன. வருடத்திற்கொரு பள்ளி மாறவேண்டியிருக்கிறது. வீடும் மாறவேண்டியிருக்கிறது. வீட்டிலும் அவர்களால் பல தொல்லைகள். இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியினர் குழந்தைகளை விடுதியில் சேர்க்கிறார்கள்.

அதன்பின் அவர்களுக்கு இதுதான் சிக்கல் என்பதை மருத்துவர் தமிழ்நாடனாக நடித்திருக்கும் சூர்யா கண்டுபிடித்துச் சொன்னபிறகு நடக்கும் விசயங்களே கதை.

முனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் போட்டிபோட்டு நடித்து மனதைக் கவருகிறார்கள். விடுதியில் அவர்களை விட்டுவிட்டுப்போனதும் அவர்களுடைய தவிப்பு... உருக்கம்! 

சென்னைப் பெருநநகரத்து உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள், குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

இரண்டு தம்பதிகளை வைத்துக்கொண்டு உயர்நடுத்தரமக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முனீஸ்காந்துக்கு இருக்கும் பணக்காரவியாதி அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்கவைக்கப் பயன்படுகிறது.

சூர்யா, அமலா பால் என்ற ஸ்டார் கேஸ்டிங்கை வீணாக்காமல் நல்ல மெசேஜ் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக அசத்துவது சூர்யாவுக்கு கை வந்த கலை. ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஜாலி மருத்துவராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதைக்குள் அவர் வந்தாலும் அந்த ரசனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பல கௌரவத் தோற்றங்கள். சமுத்திரக்கனி தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போகும் நேரத்தில், குழந்தையின் ஆசிரியர் தனியார் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க நெடிய வரிசையில் காத்திருக்கும் காட்சியும் அப்போது அரசுவேலைகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று அரசாணை வரவேண்டும் என்று சொல்லும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறது.

குழந்தைகள் கெட்டவார்த்தை பேசுவதில்லை கேட்டவார்த்தையைத்தான் பேசுகிறார்கள், மதிப்பெண்களை விதைக்காதீர்கள் மதிப்பான எண்ணங்களை விதையுங்கள் உள்ளிட்ட பல வசனங்கள் சாட்டையடி!
அமலா பாலை வைத்து தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் நடக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் போட்டியில் இந்தக்குழந்தைகள் பங்கெடுக்க அவர்களே வெற்றிபெறுகிறார்கள் என்று காட்சி வைக்காமல் வித்தியாசமாக வைத்து பாராட்டைப் பெறுகிறார் பாண்டிராஜ்.

இசையமைப்பாளர் அரோவ்கெரோலி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.

குழந்தைகள் சாலையில் ஆம்புலன்ஸ் போகும்போது அப்படியே நின்று அவர்களுக்காகக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் காட்சிகளில் சிலிர்க்கவைக்கிறார்கள். அப்படியான சிலிர்ப்பு அத்தியாங்கள் படம் நெடுக இருக்கின்றன.

பசங்க-2... இது குழந்தைகள் படமென்று சொல்வதைக் காட்டிலும், இது பெற்றோருக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!

‘இந்தியால குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா?’ - பூலோகம்


லோக்கல் வியாபாரமே குளோபல் முதலாளிகளின் கல்லா கணக்கு என பாக்சிங் க்ளவுஸால் முகத்தில் அறைந்து சொல்கிறான் பூலோகம்!

ஹைலைட் :  ‘ஒரு நாளைக்கு 100 கார் விக்கிறதைவிட 1 கோடி கீரை கட்டு விக்கலாம். கட்டு 5 ரூபான்னு வைச்சாலும் தினம் 5 கோடி ரூபாய் பிசினஸ்!’, ’இந்த நாட்டுல பணக்காரங்க கொஞ்சமா இருக்காங்க... அவங்களை விடு. குடிசைங்கதான் கோடிக்கணக்கா இருக்கு. அந்த ஒவ்வொரு குடிசைல இருந்தும் கொள்ளையடி!’, ‘நான் போட்டி நடத்துறது விளையாட்டை வளர்க்கவா..? இல்லை... ரெண்டு கோஷ்டியை உருவாக்கி, அவங்களுக்கு நடுவுல கோஷ்டி பூசலை உருவாக்கி... அதுல இருந்து நான் காசு சம்பாதிப்பேன்!’ - கார்ப்பரேட்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையை சுளீரென புரியவைக்கும் இயக்குநர் கல்யாணகிருஷ்ணனின் முனைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்!

கதை :  வடசென்னையில் இரண்டு குத்து சண்டைக் குழுக்கள்... நாட்டு வைத்தியர் பரம்பரை, ராசமாணிக்கம் பரம்பரை. இரண்டு குழுக்களுக்குமிடையே எப்போது சண்டை நடந்தாலும் களத்துக்கு வெளியிலும் அதகளம்தான். கடைசியாக நடந்த குத்துச்சண்டையில் தோல்வியடைந்த ஜெயம் ரவியின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அந்தப் பகையைத் தணிக்கவும் நாட்டு வைத்தியர் பரம்பரை இழந்த பெருமையை மீட்கவும் ஜெயம் ரவி சிறு வயது முதலே ஆவேசமும் ஆக்ரோஷமுமாகக் காத்திருக்கிறார்.
 இந்நிலையில் தொழில் முறை குத்துச்சண்டைகளை ஐ.பி.எல் பாணியில் 'சாம்பியன்ஷிப் போட்டிகளாக' நடத்த பெருந் தொகையை முதலீடு செய்கிறது பிரகாஷ்ராஜின் தனியார் சேட்டிலைட் சேனல். அதன் முதல் போட்டியாக ஜெயம் ரவியையும் ராசமாணிக்கம் பரம்பரையை சேர்ந்த ஆறுமுகத்தையும் மோத வைக்கிறது. பரம்பரை பழியை தீர்த்துக்கொள்ள போட்டிக்கு ஜெயம் ரவி சம்மதிக்கிறார். தொடரும் சம்பவங்களில் கார்ப்பரேட்களின் லாபவெறிக்கு தாங்கள் பலியாவதை உணர்கிறார் ஜெயம் ரவி. அப்போது வெளிநாட்டிலிருந்து சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள வருகிறான் ஒரு ‘உயிர் கொல்லி’ பாக்சர். ’ரிங்’கிற்குள் சைக்கோவாக எதிராளியை அடித்துக் கொல்லும் அவனை தோற்கடித்து கார்ப்பரேட் சூழ்ச்சிக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறார் ஜெயம் ரவி. உயிரைப் பணயம் வைக்கும் அந்த முயற்சியில் என்ன நடக்கிறது என்பது பரபர ’நாக்-அவுட்’ அத்தியாயம்!

ஆன் த ஸ்க்ரீன்:  சென்னை பூர்வகுடிகளின் சிறுதெய்வமான "பாடிகார்ட்" முனுசாமியாய் கண்முன் நிறுத்துகிறார் "பூலோகம்" ஜெயம் ரவி. களத்தில் இறங்கும் போது 'டான்சிங்' பூலோகமாக மாறி பீட் ஸ்டெப் போடுவதும், எதிரியை வீழ்த்தியபின் அவன் நிலைகண்டு கலங்குவதும், கில்லர் பாக்சருடன் ரிங்கில் சளைக்காமல் மல்லுக்கட்டுவதுமாக... ஆர்ப்பட்டா அப்ளாஸ் அள்ளுகிறார். ஆரம்பக் காட்சிகளில் அதிர்வேட்டு உற்சாகத்துடன் அவர் வளையவருவது கொஞ்சம் ‘ஓவர் டோஸாக’ தோன்றுகிறது. ஆனால், அதுதான் அம்மக்களின் இயல்பு, ஈர மனசுக்காரர்கள் எந்த உணர்வையும் உக்கிரமாகக் கொண்டாடுவார்கள் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்கள் அழுத்தமாகப் பதிகிறார் ஜெயம் ரவி. அதிலும் அங்காள அம்மன் மயானக்கொள்ளை பாடலிலும், க்ளைமாக்ஸ் சண்டையின்போது ‘அங்காளம்மாடா... அங்காளா’ என ரவி உக்கிரமாக உறுமுவது... டெரர். வெல்டன் ரவி!

ஜெயம் ரவிக்கு அடுத்து படத்தில் மிரட்டுவது... அமெரிக்கன் பாக்சராக வரும் நாதன் ஜோன்ஸ். ஈஃபில் டவர் உயரம், மேட்டூர் அணை அகலம் என தோற்றத்திலேயே ‘அம்மாடி’ அதிர்ச்சியைக் கொடுக்கிறார். வெறி பிடித்த மனிதனாக உறுமுவதும், வேட்டி கட்டிக் கொண்டு கொட்டு மேளத்துக்கு ஸ்டெப்ஸ் போடுவதும், ‘ரிங்’கில் ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்குவதுமாக... மஸ்து மச்சான்!

டாட்டூ கேர்ள் ஃப்ரெண்ட் த்ரிஷா ரவிக்குப் பயிற்சியளிக்கும் காட்சிகளில் மட்டும் ஈர்க்கிறார். ’டூயட்’ காலம் முதல் செய்யும் கதாபாத்திரம்தான் பிரகாஷ்ராஜுக்கு. மனிதர் அசால்ட் செய்கிறார்.

ஆஃப் த ஸ்க்ரீன்:   திரைக்கதைதான் படத்தின் பலமும் பலவீனமும். பாக்சிங்கிற்கான களத்தை ஏக எதிர்பார்ப்புடன் அமைத்தாலும், இடைவேளைக்கு முன்னும் பின்னும் சம்மந்தமில்லாமல் அல்லாடுகிறது. அதுவே கடைசி அரை மணி நேரத்தில் பொறி பறக்கிறது. பாக்ஸிங்கின் ஆக்‌ஷன் அதகளங்களை ‘ரிங் கார்னர்’களுக்கு பாய்ந்து பாய்ந்து பக்கா பாக்கெட் செய்திருக்கிறது சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு. பாக்சிங் ரிங்கின் ஒவ்வொரு பன்ச்சிலும் ஆர்.டி.எக்ஸ் அக்ரோஷம் சேர்த்திருக்கிறது மிராக்கிள் மைக்கேல், லார்ன் ஸ்டோவெல் ஆகியோரின் ஒளிப்பதிவு.

பன்ச் வசனங்கள் :

  ’இந்தியா ஏழை நாடுதான்... ஆனா, பெரிய சந்தை’,
’ஒரு நாளைக்கு ஒரு கார் விக்கிறதைவிட, 10 லட்சம் ஷாம்பு பாக்கெட் விக்கிறதுதான் அதிக லாபம்’,
’ஓவ்வொரு அடியையும் அவன் வியாபாரம் பண்ணி காசாக்கிட்டு இருக்கான்’,
‘பூலோகம் அடி வாங்கிவிழுற இடத்துல விளம்பரம் வை’,
’எந்த கோடீஸ்வரன் புள்ளையா பாக்சர் ஆகியிருக்கான்?’,
‘வியாபாரம் சர்வதேசம்... அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்’,
’இந்தியனுக்கும் அமெரிக்கனுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆனா, அப்படி பகை இருக்கிற மாதிரி காமிச்சாதான் வியாபாரிங்க காசு பார்க்க முடியும்!’,
‘இவ்ளோ பெரிய நாட்ல குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா?’ - உலகமயமாக்கலின் சுரண்டல் பக்கங்களை 'காம்ரேட்' பார்வையுடன் காரசார வசனங்களாக்கி இருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன் (படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரே!).

ஃபைனல் பன்ச் : கிரிக்கெட்டை வணிகமாக்கும் ஐ.பி.எல் அலப்பறைகள், தினசரி நுகர்வு பொருட்களை அந்நிய வியாபாரிகள் கையில் கொடுக்கும் அரசியல் வியூகங்கள், சேனல் ரியாலிட்டி ஷோக்களின் கல்லா கட்டும் களேபரங்கள்... இந்த அனைத்து சூதுகளையும் பாக்சிங் எனும் கமர்ஷியல் களத்தில் வைத்து அழுத்தமாக மனதில் விதைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். அதிலும் உலகமய வணிகத்தை உள்ளூர் சேரி மக்களின் பின்னணி கொண்டு சொல்லியதில்.... இன்னும் ஈர்க்கிறார் இயக்குநர்!

வணிக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் லாபவெறியர்களின் முகத்தில் நாக்-அவுட் குத்து விட்டிருக்கிறான் பூலோகம்!

சர்க்கரை நோயாளிகளா ? – சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்

சீத்தாப்பழம் நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை.அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது.

சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அதுதொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்சீத்தாப்பழம்-1பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும். மக்னீசியம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கிறது. குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறில்லை.

பொட்டாசியம் குறைவான அளவு பொட்டாசியம் இருந்தால், சர்க்கரை நோய்க்கான கதவு வேகமாக திறக்கப்படும்.முறையான வழிமுறையில் பொட்டாசியத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்திருப்பது தான்

சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. பொதுவாகவே பொட்டாசியமானது செல்லுலர் செயல்பாடுகளை கவனிக்க உதவும், ஆனால் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். இரும்பு மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்றாகும்.இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழர்கள் உணவையே மருந்தாக கொண்டும், மருந்தையே உணவாக கொண்டும் இயற்கை சார்ந்த வாழ்வியலை உலகிற்கு கொடையாக கொடுத்துள்ளனர்

ரஜினி, விஜய் தவிர எல்லாரும்தான் கெட்ட வார்த்தை பேசுறாங்க! சிம்புவுக்கு ஆதரவாக ராதிகா கொடி!

வேடிக்கை பார்த்தவன் வேட்டியிலேயும் வெத்தலப் பாக்கு எச்சின்னு ஆகிவிடும் சில விமர்சனங்கள். அப்படிதான் ஆகிவிட்டது ராதிகா சரத்குமாரின் சிம்பு சப்போர்ட் விவகாரமும்! ஒரு டேஷ் பாடலை பாடிவிட்டு, அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறார் சிம்பு. போலீஸ் தேடுவதாக ஒரு புறம் சொல்லப்பட்டாலும், அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. அவர் வீட்லதான் ஜம்முன்னு இருக்கார் என்கிறது இன்னொரு தகவல். அவர் கைதுதான் இப்போது பிரச்சனையா என்பதையெல்லாம் தாண்டி, இந்த விவகாரம் வேறொரு திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

முதலில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன பண்ணுது என்று கேள்வி கேட்ட நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போது சிம்பு செய்தது மன்னிக்கக் கூடிய தவறுதான். அதை இவ்வளவு பெருசுபடுத்த தேவையில்லை என்று கூறிவிட்டார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரது மனைவி ராதிகா, சற்று ஸ்டிராங்காகவே சிம்புவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார்.

ஒரு தவறான வார்த்தையை அவர் பாடல்ல பயன்படுத்தினார் என்பது தப்புதான். ஆனால் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் கெட்ட வார்த்தை பேசி, அது சென்சாரில் அனுமதிக்கப்பட்டும் வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சு, ரஜினி, விஜய் தவிர மீதி எல்லா ஹீரோக்களுக்கும் சினிமாவில் கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. சிம்புவை இந்தளவுக்கு ஒரு தீவிரவாதி போல சித்தரிப்பது அவசியம்தானா என்பதுதான் என்னோட கேள்வி என்று கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் கூட விடுங்கள். ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். ‘பொறி இங்க இருக்கு. வடை இங்க இருக்கு. எலி எங்கடா?’ என்று. சிம்பு விஷயத்திலும் அந்த கேள்வியைதான் எழுப்ப வேண்டியிருக்கிறது. பாட்டு யூ ட்யூப்ல இருக்கு. பாடிய சிம்புவும் இங்கதான் இருக்கார். அதை லீக் பண்ணியவன் எங்கே இருக்கான்? அட்டாக் பாண்டியவே கைது பண்ணிய போலீசுக்கு, அந்த லீக் ஆசாமியை பிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?

விஜய் மனைவியை பாராட்டிய பிரபல பாடகர்

விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பாராட்டியுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. விஜய்யின் மனைவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகர்களின் பெயர்கள் பலரை சங்கீதா நினைவில் வைத்திருந்தது என்னை ஆச்சரியமடைய செய்தது. எலிமினேட் ஆன சிங்கர்களின் பெயர்களை கூட சங்கீதா என்னிடம் கூறி அவர்களுடைய திறமையை பற்றி பேசியது என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் முதல்முறையாக பூமிக்கு திரும்பியது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் மகத்தான சாதனை

விண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பால்கன்–9 ராக்கெட், பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.
ராக்கெட்டுகள்
செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிற வாகனங்களாகத்தான் ராக்கெட்டுகள் பயன்படுகின்றன. அந்த வகையில் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் சுமந்து சென்று, விண்வெளியில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தி விடுவதுடன் அவற்றின் பணி முடிந்து விடும். அந்த ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்புவதில்லை. அவை சாம்பலாகி விடும். இதுதான் இயல்பு. இதுவரை நடந்து வந்ததும் இதுதான்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீசுவரர் எலன் முஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து சென்று, புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி விட்டு, ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்ப வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.
சென்றது, வென்றது, திரும்பியது
இந்த நிறுவனத்தின் பால்கன்–9 ராக்கெட், 11 சிறிய செயற்கைக்கோள்களுடன் நேற்று முன்தினம் இரவு 8.33 மணிக்கு அமெரிக்காவில் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தப்பட்டது. 9 நிமிடங்களில் அந்த ராக்கெட், சுமந்து சென்ற 11 சிறிய செயற்கைக்கோள்களையும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதைத் தொடர்ந்து செங்குத்தான நிலையில் கேப் கேனவரல் ராக்கெட் தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இது விஞ்ஞான தொழில் நுட்பத்தில், மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.
எலன் முஸ்க் மகிழ்ச்சி
இது எலன் முஸ்க் குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சாதனை குறித்து முஸ்க், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில், ‘‘திரும்ப வந்துள்ள குழந்தையை வரவேற்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அவர் நிருபர்களிடமும் பேசினார். அப்போது அவர், ‘‘இது ஒரு புரட்சிகரமான தருணம். இதுவரை யாரும் பூஸ்டரை திரும்ப கொண்டு வந்தது இல்லை. இது மிகவும் பயன்தரக்கூடிய ஒரு திட்டம் ஆகும். 11 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி விட்டு ராக்கெட் திரும்ப வந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.

பால்கன்–9 ராக்கெட் பூமிக்கு திரும்பி இருப்பது, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தாரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அவர்கள் ஆடிப்பாடி, கொண்டாடினர்.

கடந்த ஜூன் மாதம் 28–ந் தேதி இதே நிறுவனம், பால்கன்–9 ராக்கெட்டை சரக்குகளுடன் கூடிய விண்கலத்துடன் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஏவியது. ஆனால் அந்த பயணம் வெற்றி அடைய வில்லை. அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.

இப்போது பால்கன்–9 ராக்கெட் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அதை சீர்செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இதனால் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான செலவு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!


விஜய் டிவி “நீயா நானா” பார்த்து ரசித்து கலங்கி அழும் ரசிகரா நீங்கள்? அவசியம் இந்த கட்டுரையை படியுங்கள்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“இந்த நிகழ்ச்சியில் தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு பேச வைக்கிறார்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கருத்துக்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது கருத்து:

“நீயா? நானா? நிகழ்ச்சி பற்றிய அதிருப்தியை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி நான்கைந்து நாட்களுக்கு மேலாக மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒண்ணு அழவைப்பாங்க; இல்ல சண்டைபோட வைப்பாங்க என்பதெல்லாம் கடந்து ஆக்கப்பூர்வமாக சில கருத்துகள் தான் அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்தவாரம் “உட்கார்ந்து வேடிக்கைபார்த்ததில்” நீயா நானாவின் பல குட்டுகளை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது.  கலந்துகொண்ட மற்ற நண்பர்களும் தங்கள் கசப்பனுபவங்களைக் கொட்டியும் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரிந்துரைத்தவரின் மீதிருந்த மரியாதையும், தன்னார்வலர்களைச் சந்திக்க வாய்ப்பமையும் என்ற எண்ணத்திலும் சென்றிருந்தேன்.

காலவரையில்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களின் நேரத்தை தின்று தீர்ப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மாலை 5.30க்கு தொடங்கவேண்டிய ஒளிப்பதிவு 8.00மணிக்குத் தொடங்கியது. 11மணிக்கு முடியும் என அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சி நள்ளிரவு 2.30மணி வரைக்கும் நீண்டுகொண்டே போனது.

ஊடக தர்மத்தில் நேரம் ஒரு பொருட்டில்லை என்றாலும் வெளியூர்களிலிருந்து அழைக்கும் நபர்களைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அதுபற்றிய வருத்தங்களோ, உணர்வோ இல்லாமல் நடந்துகொள்வது நாங்கள் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் அடைந்து விட்டோம் நீங்களென்ன சுண்டைக்காய் என்பது போலத்தான்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைப்பது. அவர்கள் மூலம் ஒரு கனமான சூழலை உருவாக்கிவிட்டு மற்ற பெண்களை நோக்கி கவனத்தைத் திருப்பி அவர்களையும் அழச்செய்வது. தப்பித் தவறி அழுதுவிட்டால் போதும் “மைக்கை அவர்கிட்டே கொடுங்கள்” என்று விடாமல் சொல்லுங்க எப்படி இருக்கு உங்கள் மனநிலை சொல்லுங்க என்று துன்புறுத்துவது.

நாற்பது சொச்சம் இருக்கைகளை நிரப்பி இருப்பவர்கள் நிலை ஜென் நிலைதான். யார் யாரை எங்கே உட்கார வைப்பது என்ற தேர்ந்தெடுத்த பட்டியலை வைத்து இயக்குனருக்கு முன்கூட்டியே தகவல்கள் போய்விடும். “லகான் படத்தில் இவன் நம்மாளு இவன் பக்கம் பவுண்டரி அடி புடிக்க மாட்டான்” என்பது போல அவரை வைத்து தங்கள் ஸ்க்ரிப்ட்டைப் பேச வைத்துவிடுவது.

கௌரவ அழைப்பாளர்களிடம் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்க, அவர் கொட்டைப்பாக்கு விலை இவ்வளவு என்பார். உடனே அங்கிருந்து இயக்குனர் சூப்பர் சொல்லி கை குடுங்க என்று நெறியாளர் கோபியை உசுப்பிவிட, நம்மவர் உட்கார்ந்த இடத்திலிருந்து உணர்ச்சிபொங்க எழுந்துவந்து, “அருமை இதான் எதார்த்தம் கையக்குடுங்க உங்க பேரு என்ன” என்று இயக்குனர் செய்யச் சொன்னதை அப்படியே அப்பட்டமாக நடிக்கும்போது வாய்மூடி மௌனிகளாக மற்றவர்கள் இந்த நாடகத்தை வேடிக்கைபார்த்து விட்டு ”அட நாசாமா போனவனுங்களா” என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் வரிசையில் “இவர்” எங்கப்பா வந்தாரு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அங்கே அமர்ந்திருந்தது நம்ம கிஷோர் கே சுவாமி. நண்பரை எப்படி கலாய்க்க முடியும் அதனால் தான் புதிய தலைமுறையில் தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்ன “அதே கதையை” எடுத்துச் சொன்னதும் என்னை முறைத்துக்கொண்டே நகர்ந்தார். எவ்வளவு டிராபிக் ஜாம்கள்.

கேமிராக்களுக்குப் பின்னே உட்கார்ந்து இயக்குனர் நம் கருத்துகள் மீது கோலோச்சுவதாகட்டும், நீ என்னய்யா/ம்மா புதுசா கருத்து சொல்றது, எங்களுக்கு உங்கள் வாயிலிருந்து என்ன வேண்டுமோ அதைச் சொல்லுங்கள் அதற்காகத்தானே உங்களை அழைத்துவந்தோம் என அதிகாரத் தொனியில் போட்டுவாங்குவது என்று அத்தனை நாடகத்தனமும் நம் கண்முன்னே பல்லைக்காட்டும் நிகழ்ச்சி தான் நீயா நானா? கார்த்திக் புகழேந்தி.



ரியாலிட்டி ஷோ. டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்களை மகா மட்டமான மனநிலையோடு நடத்தும் நடைமுறை நீயா நானாவுடையது என்பது என் சொந்தக் கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

முன்னர் கலந்துகொண்டவர்கள் கூட இந்தப் பதிவை ஒரு குறுஞ்சிரிப்போடுகூட கடந்துபோகலாம். யார் கண்டது. நிமிட நேரங்களில் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற ஒரே தேவைக்காக ஊடக அழிச்சாட்டியங்களை வாய்திறந்து பேசாமல் இருப்பது நியாயமானதாகப் படவில்லை.

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மழைவெள்ளத்தில் இயங்கிய தன்னார்வலர்கள், என்.ஜி.ஓக்கள், மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புகளிலிருந்து சிலரை அழைத்துவந்து “மழை கற்றுக்கொடுத்த பாடம் என்ன?” என்பதுபோன்ற தலைப்பைச் சூட்டி அதன் மூலம் இந்த அரசாங்கம் வெள்ள நிவாரணப் பணிகளில் விரைந்து செயல்பட்டு நோய் பரவாமல் தடுத்திருக்கிறது என்று ஒரு மருத்துவர் வாயாலே சொல்லவைத்து உஷ்ஷ்ஷ்ஷ்… ஒரு பக்கா நாடகம்.

ஆதங்கத்தோடு வடசென்னை பற்றிய கருத்துகளையோ, இருளர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய பேச்சையோ, கடலூரில் நடந்த அடாவடிகளைப் பற்றிய கருத்தையோ நீங்கள் முன்வைக்கவே முடியாத கூடத்தில் அரசியல் ஜால்ராகளை மட்டும் அடி பின்னி எடுக்கலாம். கொஞ்சம் அங்கங்கே, மானே தேனே அழுகை. எக்ஸ்ட்ரா பிட்டிங்காக “வாலண்டியர்ஸ் உங்களை நீயா நானா மனதாரப்பாராட்டுகிறது” என்று பசப்பு வார்த்தைகள் இதெல்லாம் தான் அன்றைய நிகழ்ச்சியில் வேகவைக்கப்பட்டது.

மாற்றுக்கருத்துகள் எங்கள் டி.ஆர்.பியை ஏற்றுமெனில் அதுபோதும் என்ற மனநிலையோடு ரட்சகர் வேடம்போட்டுக்கொண்டு கேள்விகளை முன்வைத்து, தங்களுக்குச் சாதகமான பதிலை நம் மனதில் பதிய வைப்பதன் மூலம் நம் ஆழமான கருத்துகளுக்கும், ரோசத்திற்கும் ஆண்மைநீக்கம் செய்துவிடும் இந்நிகழ்ச்சியைத் தான் சமூகமாற்றத்திற்கான நிகழ்ச்சிகளில் முதன்மையானதாக நம்பிக்கொண்டிருக்கிறது ஒருபாதித் தலைமுறை.

இன்னும் சொல்லாத நிறைய ஏமாற்றுவேலைகள் இருக்கிறது. தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு முன் வரிசையில் உட்கார வைத்து விசமக் கருத்துகளை கலந்துவிடுவது தொடங்கி, ஏகப்பட்ட சித்துவேலைகளைக் கைக்கொண்ட இவ்விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி ஆனமட்டும் ஒரு ஆள்பிடிக்கும் கும்பலாக மாறிக் கொழுத்து, தங்களுக்கு எதிரான கருத்துகளை ஒழித்துக்கட்டி, இன்றைக்கு மக்களின் சுய அறிவைச் சிதைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது என்பதே என்னளவில் உணர்ந்தது.

இங்கே கோபிநாத் ஒரு பொம்மை. அவரை இயக்கும் எல்லாம்வல்ல வலிமையைக் கைக்கொண்ட இயக்குனர் மற்றும் நிர்வாகம் அனைத்திற்கும் கூச்சமே இல்லாமல் தலையாட்டும் பொம்மை. அவரைத்தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நீயா நானா புகழ் கோபிநாத் என்று பேனர் கட்டி அழைக்கிறார்கள் என்றபோது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.”

தமிழில் திக்கித் திணறிய விஜயகாந்த் மகன்!

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.... தமிழன் என்று சொல்லடா... என்றெல்லாம் தமிழில் முழங்குவார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். ஆனால் அவரது மூத்த மகனுக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் பேச வரவில்லை.

சிசிஎல், ஐசிஎல் என ஆளாளுக்கு ஒரு விளையாட்டுக் கம்பெனியை ஆரம்பித்து பணம், பப்ளிசிட்டியை ஏகத்துக்கும் குவிப்பதைப் பார்த்த கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு, தானும் அப்படி ஒரு கம்பெனியை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது.

பிபிஎல் - பிரிமியர் பேட்மின்டன் லீக் - என்ற பெயரில் நடக்கும் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் ஆடும் சென்னை அணியை விலைக்கு வாங்கி சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட நேற்று நடந்த பிரஸ் மீட்டில், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசிய விஜய பிரபாகரனுக்கு, தமிழ் திக்கித் திணறியது. அவர் பேசியதைக் கேட்டு, 'தமிழுக்காக அப்படி குரல் கொடுக்கும் தலைவரின் மகன் பேசும் தமிழா இது...

விஜயகாந்த் தன் தமிழ்ப் பணியை வீட்டிலிருந்தேயல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்' என்று ஒரு குரல்! கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்ன பாணியோ தூக்கி அடிச்சிருவாரோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருந்தது!

பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்!

 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா?

படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது.

'பசங்க 2' எப்படி?

நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள்? அது என்ன முடிவு? அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாக காட்டியதற்காக இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.

கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகிய இருவரும் புதுமுகங்கள். ஆனால், அவர்களின் சேட்டைகள், குறும்புகளுக்கும் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. அச்சரம் பிசகாத நடிப்புக்கு கிளாப்ஸ் பறக்கிறது.

நிஷேஷின் டான்ஸ் ஃபெர்பாமன்ஸுக்கு அரங்கம் அதிர்கிறது. வைஷ்ணவியின் பிஞ்சுக் குரலில் இருக்கும் தவிப்பைப் பார்த்து கண்கள் கசிகின்றன. இந்த சுட்டிகளுக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

அடங்காத பையனை வைத்துக்கொண்டு அவதிப்படும் அப்பாவாக 'முனீஸ்காந்த்' ராமதாஸ் பின்னி இருக்கிறார். கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

பிளே ஸ்கூல் டீச்சரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்துக்கு அமலாபால் சரியான தேர்வு. விழிகளை அசைத்து குழந்தைகளுக்கு பாவனை காட்டும் நடிப்பும், அவர் குழந்தைகளை அணுகும் முறையும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதை நகர்த்தலுக்கு முக்கியமான கருவியாக சூர்யா செயல்படுகிறார். ஆனால், அவர் அறிவுரை சொல்லும்போதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இன்னும் கௌதம் மேனன் படத்தில் பேசுவதைப் போலவே எல்லா இடங்களிலும் பேசுவது நல்லா இருக்குமா சார்? டயலாக் டெலிவரியை மாத்துங்களேன் ப்ளீஸ்.

பாலசுப்ரமணியெத்தின் கேமரா குழந்தைகள் உலகை வண்ணமயமாகக் காட்டி இருக்கிறது. தன் ஒளிப்பதிவு மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம்.

அரோல் கொரெலி இசை உறுத்தாமல் இருக்கிறது. சோட்டாபீம் பாடலும், காட்டுக்குள்ள கண்ணைவிட்டு பாடலும் கவனம் பெறுகின்றன.

''பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க.''

''உங்க பசங்க தனிச்சு நிற்குறவங்க இல்ல. தனித்துவமா நிற்குறவங்க.''

''மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்'' போன்ற பாண்டிராஜின் வசனங்களுக்கு கரவொலி கூடுகிறது.

குழந்தைகளை பெரிய மனிதர்களாக காட்ட அதிகம் முயற்சிக்கவில்லை என்பதற்காகவும், போகிற போக்கில் ரியாலிட்டி ஷோக்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியதற்காகவும் பாண்டிராஜுக்கு நன்றி.

குழந்தைகள் படத்தை முழுமையாக தர வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை பாண்டிராஜ் அப்டேட் செய்திருக்கிறார். ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் உலவும் வசனங்களை, ஐடியாக்களை பயன்படுத்தி இருக்கீங்களே நியாயமாரே?

சூர்யாவின் குழந்தை ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

குழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா? பெற்றோர்களுக்காக மாறுவதா? என்ற சிக்கல்களுக்கான தீர்வை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.

மொத்தத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பசங்க 2'.

பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை:

குழந்தைகள் துறுதுறு என்று இருந்தாலோ, பக்கத்து வீடுகளிலோ, பள்ளிக்கூடங்களிலோ உங்கள் பிள்ளை குறித்து ஏதாவது சொன்னாலோ பதறிப் போகாதீர்கள். குழந்தைகளை எப்படி வளர்க்கக்கூடாது, எப்படி வளர்க்கலாம்? என்பதை 'பசங்க 2' பார்த்து முடிவு செய்யுங்கள்.

பாண்டிராஜுக்கு ஒரு கோரிக்கை:

கமர்ஷியல் சினிமாதான் பண்ணுவேன் என அடம்பிடிக்காமல் குழந்தைகளுக்காக படம் எடுங்க சார். அந்த குழந்தைகள் உலகம் உங்களைக் கொண்டாடும்.

பட்டயக் கிளப்பும் தாரை தப்பட்டை பாடல்! எவர் ‘ ரெய்ன் ’ இளையராஜா!

          இளையராஜாவின் ஆயிரமாவது படம்! பட்டன் மட்டுமல்ல, சட்டையே தங்கமாய் ஜொலிக்கும் போலிருக்கிறது!! மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த ‘தாரை தப்பட்டை’ பாடல் வெளியீட்டு விழா, தமிழகத்தின் மழைத்துயரம் காரணமாக அமைதியாக முடிந்துவிட்டது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி காற்று வெளியில் தவழ வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களின் ஓப்பனிங்கே செம செம… அதுவும் அந்த நாயனமும், மேளமும் கலந்தொலிக்கும் அந்த முதல் தீம் பாடலில் “வாங்கடா… முடிஞ்சா நின்னு பாருங்கடா…” என்று சவால் விட்டிருக்கிறார் இளையராஜா.


ராதிகாவை தொடர்ந்து பீப் பாடல் குறித்து சரத்குமார்

சிம்பு வெளியிடாத பீப் பாடல் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. அப்பாடல் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பாடவில்லை என்பது அதைக் கேட்ட அனைவருக்கும் புரியும்.

சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா ஆகியுள்ளார்.

ஏதாவது படத்திலோ, மேடையிலோ, ஆல்பத்திலோ சிம்பு வெளியிட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதுதொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் தாயார் கண்ணீர் மல்க இதுபற்றி பேட்டியளித்துள்ளார். இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு’ என்ற அடிப்படையில் சிம்பு செய்திருக்கும் தவறை மன்னிப்போம். இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியதுதானே தவிர தண்டிக்கப்பட வேண்டியது அல்ல'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்

நடிகர் சங்கத்தின் 'குருதட்சனை திட்டம்'!

தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் 27.12.15 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு தமிழகமெங்குமுள்ள மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில், உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்யப் பட உள்ளது.

இதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய  இருபது வீடியோ கேமராக்களுடன் "வேல்ஸ் கல்லூரி" நிறுவனத்திலிருந்து விஸ்காம் படிக்கும் மாணவர்கள் குழுவும், மேலும் உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து இருபது உதவி இயக்குநர்களையும் குழுவாக அமைத்து செயல்பட உள்ளார்கள்.

பாண்டவர் அணி அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றான "குருதட்சனை" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் முதற்க் கட்டமாக இந்நிகழ்வு சென்னையில் ஆரம்பமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட  நாடக நடிகர் சங்க நிர்வாகிகளும் மாவட்டங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களும் நேரடியாக சென்று விபரங்களை சேகரித்து நடிகர் சங்க இணையதளத்தில் பதிவு செய்து குரு தட்சனை திட்டத்தில் உள்ளடக்கிய, வேண்டிய உதவிகளை செய்ய உள்ளது.

வருகிற 27-ம் தேதி காலை 9 மணிக்கு அபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் பிரம்மாண்ட பந்தலிட்டு நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவக்குமார், சூர்யா, வடிவேலு, ஆகியோரின் முன்னிலையில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் தலைமையில் நடிகர்கள் நந்தா, ரமணா, ஸ்ரீமன்,உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில், அனைத்து செயற்குழு  உறுப்பினர்களும், அலுவலக ஊழியர்களும் இந்த பணியில் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.

தொப்பையை குறைக்க அருமையான வழி !

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி…ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் - திரை விமர்சனம்

சிறுவயதிலேயே தாயை இழந்த பிரவீன் குமார், தனது அப்பா ஜெயப்பிரகாஷ் மீது அதிக பாசம் கொண்டவராக இருக்கிறார். என்ஜினீயரிங் முடித்த அவர், தனது மனைவி சனம் ஷெட்டி மற்றும் கைக்குழந்தையுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் பிரவீன் குமார் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வருகிறார்.

தனது அப்பாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தனது கையில் அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பரிடம் உதவி கேட்கிறார். அவரது நண்பன் பாலசரவணன் மூலமாக கந்து வட்டிக்காரர் அருள்தாஸிடம் ரூ.50 லட்சம் வட்டிக்கு வாங்கி தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். பின்னர் அருள்தாஸுக்கு சரியான நேரத்தில் பணம் தரமுடியாமல கார்த்திக் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அருள்தாஸ் இதனால் பிரவீனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். கடனை அடைக்க வழியில்லாமல் தவிக்கும் அவருக்கு, தனது முன்னாள் காதலியான ஷாலினி வட்னிகட்டி பெரிய பணக்காரரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் இருப்பது தெரியவருகிறது. இதனால், இவர்கள் காதலிக்கும்போது ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்களையெல்லாம் காட்டி அவளிடம் பணம் பறிக்க திட்டம் போடுகிறார்.

இந்த திட்டத்தை தனது நண்பன் பாலசரவணனிடம் சொல்லி செய்யச் சொல்கிறான். முதலில் தயங்கும் பாலசரவணன் பின்னர் பிரவீன் மற்றும் ஜெயப்பிரகாஷ் மீதுள்ள பாசத்தால் ஒப்புக்கொள்கிறான். பாலசரவணன் மிரட்டலுக்கு பயந்து ஷாலினி பணம் தருவதாக கூறுகிறாள். ஆனால், அவ்வளவு பணம் இல்லாததால் பிரவீனை சந்தித்து இதற்கு உதவி கேட்கிறார். மேலும், தனது கணவர் கார்த்திக் குமாரை மிரட்டி பணம் பறிக்கும்படி யோசனை கூறுகிறார்.

டாக்டராக இருக்கும் கார்த்திக் குமாரோ, இதற்காக தன்னுடைய ஆஸ்பத்திரியில் மகளின் கருக்கலைப்புக்காக வரும் கோடீஸ்வரரை மிரட்ட சங்கிலித் தொடர் போன்று இந்த மிரட்டல் நீண்டுகொண்டே போய் கடைசியில், மிகப்பெரிய தாதாவான நரேனிடம் போய் நிற்கிறது. அவர் தனது சொல்வாக்கை பயன்படுத்தி இந்த மிரட்டல் எங்கிருந்து ஆரம்பித்தது என விசாரிக்கிறார். அப்போது, இதற்கு முதற்காரணம் நாயகன் பிரவீன் என்பதை கண்டுபிடிக்கிறார். இறுதியில் அவரை நரேன் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் பிரவீன் குமார் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது அப்பாவை காப்பாற்றுவதற்காக பிளாக்மெயிலில் ஈடுபடும் மகன் கதாபாத்திரத்தில் அப்பாவியாக நடித்திருக்கிறார். தனது அப்பா இன்னும் சிலகாலம் தான் உயிருடன் இருப்பார் என்றதும் மருத்துவமனையில் இவர் கண்கலங்கி நிற்கும் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது.

நாயகனுக்கு அடுத்தபடியாக ஜெயப்பிரகாஷ், பாசமுள்ள அப்பாவாக நடித்து மனதில் ஆழமாக பதிகிறார். தனது மகனை பாசத்துடன் விசாரிப்பதில் இருந்து, மகனின் கஷ்டத்தை புரிந்து தனது நிலையை தளர்த்திக் கொள்ளும் இடங்களில் பாராட்டு பெறுகிறார். பாலசரவணன் வழக்கமாக காமெடிக்காக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்ல குணச்சித்திர கதாபாத்திரக் கேரக்டரிலும் நடித்து கைதட்டல் பெறுகிறார்.

இவர்களையெல்லாம் கடந்து மனதை தொடுபவர் நரேன். பெரியவராக வரும் இவர், வில்லன் கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்கிறார். சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி இருவரும் ஒருசில காட்சிகளே நடித்தாலும், தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கொஞ்சம் நகைச்சுவை, அதிக திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமான கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபிநிந்திரன். படத்தின் ஆரம்ப காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பின்னர், சங்கிலி தொடர்போல் செல்லும் பிளாக் மெயில் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. இடைவேளைக்கு பிறகு கதையுடன் ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர்.

சாரங்கராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பின்னணி இசை மிரட்டுகிறது. அதேநேரத்தில் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வெற்றிமாறன் கூப்டாக... எஸ்.ஏ.சி.

 விஜய்யின் தந்தை என்பதற்காக இப்படியா மனுஷன் தலையில் ஐஸை கொட்டுவார்கள்? அவர்கள்தான் கொட்டினார்கள் என்றால், அது வெறும் ஐஸ் என்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது?

நையப்புடை படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் ஹீரோ. இன்னொரு ஹீரோ கோடம்பாக்கத்தில் விலை போகாமல் கிடக்கும் பா.விஜய்.

சச்சின், துப்பாக்கி, தெறி என்று விஜய் தொடர்ச்சியாக தாணுவுக்கு கால்ஷீட் தருவதால் தாணுவுக்கு விஜய் குடும்பத்தின் மீது தனிப்பாசம் இருக்கும்தானே. முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் மீது.

நையப்புடை படத்தில் நீங்க நடிச்சாதான் நல்லாயிருக்கும் என்று அட்வான்ஸை கையில் வைத்து அழுத்தியிருக்கிறார். அவரும் நடித்திருக்கிறார். நையப்புடை படவிழாவில் பாராட்டியே நம்மை புடைத்துவிட்டார்கள்.

அமிதாப்பச்சன் நடிக்கிற வேடங்களை இனி எஸ்.ஏ.சந்திரசேகரனும் செய்யலாம் என்று எடுத்துவிட்டார் இயக்குனர் விக்ரமன். அவருக்கும் இருக்காதா, விஜய்யை மீண்டும் இயக்கும் ஆசை.

இதையெல்லாம் கேட்ட எஸ்.ஏ.சி.க்கு, அடுத்த ஆஸ்கர் நமக்குத்தான் என்று தோன்றியதில் வியப்பில்லை.

நையப்புடை வெளிவந்தால் விஜய்க்கு நான்தான் போட்டி என்றார் சின்ன சிரிப்புடன். கூடவே அவர் சொன்ன இன்னொரு தகவல், வெற்றிமாறன் அவரை நடிக்க அழைத்திருக்கிறாராம்.

வெற்றிமாறனுக்குமா பிசகு ஏற்படும்?

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது …!!

அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கள் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது …!!

இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு…!!

வெற்றியின் போது கை தட்டும்
பல கைகளை விட –

தோல்வியின்போது கண்ணீரை
துடைக்கும் ஒரு விரலே
சிறந்தது

         – அதுதான்
” நட்பு ” .

சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து

இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன. Suger

நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.

முயற்சித்துப் பார்க்கலாமே…!

மருந்து:-

வெந்தையம் – 50 கி

கருஞ்சீரகம் – 25 கி

ஓமம் – 25 கி

சீரகம் – 25 கி

இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

(வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

{வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}

விரைவில் திரையில் நடிக்கவரும் டைரக்டர் ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயமாக இருக்கும் பாரதிராஜா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தவர். ஆனால், பதினாறு வயதினிலே படத்தை இயக்கி அந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக முன்னணி இயக்குனராகி விட்டார். ஆனபோதும், அவருக்குள் இருந்த நடிப்பு ஆர்வம் காரணமாக கல்லுக்குள் ஈரம், ரெட்டைச்சுழி, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான். அதனால் சில படங்களை இயக்கியதும் நியூ, அன்பே ஆரூயிரே படங்களில் இருந்து நடிகரானார்.

இவர்கள் வரிசையில்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர். ஆனால் அவரது நடிப்பு கனவு நனவாகவில்லை. மாறாக, மிகப்பெரிய இயக்குனராகி விட்டார். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் தமிழில் பிரமாண்டமான படங்களை இயக்கி வருகிறார். அதோடு தனது படங்களில் ஏதேனும் கேரக்டர்களில் அவர் முகம் காட்டுவதுமில்லை. டைரக்சனில் மட்டுமே அவரது கவனம் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது.

ஆனபோதும், அவருக்குள்ளும் ஒரு நடிகன் இருப்பதால், சரியான நேரம் வரும்போது அவரும் நடிப்பார் என்கிறார்கள். அதுபற்றி தனது உதவியாளர்களிடம் சொல்லும்போது, இப்போதைக்கு நடிக்கிற ஆசையில்லை. ஆனபோதும், அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது எதுவும் நடக்கலாம். அப்போது எனக்குள் இருக்கிற நடிகன் வெளியில் வரலாம் என்று புதிர் போடுகிறாராம் ஷங்கர்.

ஆண்மை அதிகரிக்கும் சிரசாசனம்

ஆண்மை அதிகரிக்கும் ஆசனங்கள்

சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நின்று செய்யப்படும் ஆசனமாகும். சிரசு என்றால் தலை என்று பொருள்.

செய்முறை

விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.
கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.
உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.
தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.

இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும் 100 எண்ணிக்கை இருந்தால் போதும்.
சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடி 100 எண்ணிக்கை செய்யவும்.

மூன்று மாத பயிற்சிக்கு பிறகு சுவரை விட்டு விலகி அல்லது தனியாக செய்யலாம்.
100 எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.
பிறகு சவாசனத்தில் படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.

எச்சரிக்கைகள்

இந்த யோகாவிற்கு நீங்கள் புதிது என்றால் முதலில் சுவரின் துணையுடன் பயிற்சி செய்யவும். மேலும் தகுதி பெற்ற ஆசான் ஒருவரிடம் இந்த ஆசனத்தை கற்றுத்தேர்வதும் நல்லது.
அடிவயிறு மற்றும் முதுகெலும்பு வலி இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.