Saturday, December 5, 2015

ஸ்டிக்கரா ஒட்டுறீங்க ஸ்டிக்கரு: அதிமுகவினரை சமூகவலைதளத்தில் காரித் துப்பும் மக்கள்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிறர் அளிக்கும் நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டும் அதிமுகவினரை மக்கள் சமூக வலைதளங்களில் காரித் துப்பி வருகிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லாரி, லாரியாக நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி மிரட்டி பொருட்கள் உள்ள பைகளில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டி அனுப்புகிறார்கள்.

அதிமுகவினரின் அடாவடி தாங்க முடியாமல் நிவாரணப் பொருட்களை கொண்டு வருவோரும் ஸ்டிக்கர் ஒட்ட சம்மதிக்கிறார்கள். இந்நிலையில் நிவாரண பணியை மேற்கொள்ளாமல் நல்ல மனதோடு உதவுவோருக்கு உபத்திரம் செய்யும் அதிமுகவினரை மக்கள் சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.



அதிமுகவுக்கு ஓட்டு போட்டதை நினைத்து வெட்கப்படுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ள அதிமுகவினர் மீது புகார் தெரிவிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.


உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?

ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா

 ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?

டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்

 பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன.  அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்

 பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்

* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
 * ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
 * தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
 * உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்

 ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.

'கருத்து கந்தசாமி' 'குழப்பப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்' நடிகர் கமல்..: ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையை புரட்ட பெருவெள்ளம் குறித்து பேட்டியளித்திருந்த கமல்ஹாசன் தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் திரு.கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஓரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருயது இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருயது தமிழக மக்களைக் காப்பாற்ற, "மாண்புமிகு அம்மா" அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், "மாண்புமிகு அம்மா" அவர்களின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருயது தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு 1918 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் திரு.கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் "மாண்புமிகு அம்மா" அவர்கள் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த நவம்பர் திங்களில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பெருமழை பெய்து பாதிப்பினை ஏற்படுத்திய நேரத்தில், "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், என்னையும் அமைச்சர்கள் அனைவரையும், அரசின் உயர் அதிகாரிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் செய்தார்கள்.

இவ்வாறு சென்னை மற்றும் பிற மாவட்ட மக்களை மீட்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இம்மாத துவக்கத்தில் மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கடுமையாகத் தாக்கி ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத பாதிப்புகளைச் சீர்படுத்தி, மக்களை மீட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள், 3.12.2015 அன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிட்டார்கள்.

மேலும் "மாண்புமிகு அம்மா" அவர்களது ஆணைப்படி, அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகள் சரியானபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், வரலாறு காணாத வகையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளிலிருயது மக்களை மீட்டு, உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, நிவாரண நடவடிக்கைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருயது இதுவரை 11.53 இலட்சம் மக்கள் மீட்கப்பட்டு, 5009 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதி, மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களது அரசின் மூலம் இதுவரை 56.46 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

23,108 மருத்துவ முகாம்கள் நடத்தப் பெற்றுள்ளன. இத்தகைய போர்க்கால நடவடிக்கைகள் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக திரு. கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும்.

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடமிருயது பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரியதுகொள்ள வேண்டும் என்றால் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும்.

கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" அவர்கள் முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரியது கொள்ள வேண்டும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்களின் வரிப்பணத்தை வைத்துதான் சமூக நலப் பணிகளுக்கு 61,119 கோடி ரூபாயும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 49,930 கோடி ரூபாயும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உணவு மானியம் போன்ற மானியத் திட்டங்களுக்கும் 12,897 கோடி ரூபாயும் செலவிட, 2015-16 வரவு செலவுத் திட்டத்தில் சட்டமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மக்களின் வரிப் பணத்தை வைத்துத்தான் சாலை வசதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வளவு ஏன்? 2015-16 ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது.

ஆகவே, வரிப்பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் திரு. கமலஹாசன் அவர்களுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை. தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார்.

இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன்.

அப்போது, அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களுக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

"மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, இரக்க குணம் படைத்தவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தாங்களே முன்வந்து "மாண்புமிகு முதலமைச்சர்" நிவாரண நிதிக்கு அவர்களாகவே நிதியுதவி செய்கிறார்கள்.

மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, அவர்கள் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற கமலஹாசன் பாவ புண்ணியம் பற்றி கொண்டிருக்கும் கருத்தே வேறு அல்லவா?

அதனால்தான் கேட்காத ஒன்றை கேட்டதாகச் சொல்லி, பேட்டி அளித்துள்ளார். இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வயது வயது நிதி உதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா?

அந்த வகையில் தற்போதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி நேரடியாக சேவை செய்துவருகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமெனில் தெலுங்கு முன்னணி நடிகர் திரு. அல்லு அர்ஜுன் அவர்கள், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 இலட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். "ஈ என இரத்தல் இழியதன்று, அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழியதன்று கொள் என கொடுத்தல் உயர்யதன்று, அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்யதன்று" என்பதுதான் தமிழர் பண்பாடு.

அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் "மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா" அவர்களின் அரசு, திரு.கமலஹாசன் அவர்களிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும்.



இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 இலட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா?

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

கதை சொல்லும் ஜெயலலிதாவின் கார்

 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் சென்னை வீதிகளில் ஒரேயொரு ஃபோர்ட் கார் மட்டுமே ஓடியது. அந்தக் காருக்கு சொந்தக்காரர் அன்று முன்னணி திரைநட்சத்திரமாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்தக் கார் அன்றைய ஜெயலலிதாவை - காரின் பாஷையில் பேபி - குறித்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு ஐடியா அந்தக் காலத்திலேயே எழுந்து தனி கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். மினுக்கி எழுதப்பட்ட ஜிகினா கட்டுரைதான் என்றாலும் படிப்பதற்கு தமாஷாகவே இருக்கும். இனி ஓவர் டு ஃபோர்ட் கார்.

முதன் முறையாக சென்னைக்கு வந்தபோது எனக்கு ஒரே பெருமை. நான் சுமந்து செல்ல வேண்டியது ஒரு பிரபல நடிகை. நடிகையின் கார் என்ற முறையில் எவ்வளவு பெரிய விழாக்களிலும் ஆடம்பர விருந்திலும் இந்த ஃபோர்ட் டுகூனு எம்.எஸ்.எம். 9379 க்கு தனி வரவேற்புண்டு. எந்த இடத்திலும் ஒயிலாக ஓசையெழுப்பாமல் நான் போனாலும் எல்லோரும் என்னையே கவனிப்பார்கள். ஆரம்பத்தில் எனக்கு தலைக்கனமாகவே இருந்தது. என் அழகையும் அலங்காரத்தையும் கண்டுதான் அத்தனை பேரும் இப்படி விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள் என்று நினைக்க நினைக்க, எனக்கு தற்பெருமை பெருகியதிலும் வியப்பில்லைதான். போதாததற்கு என் குலத்தைச் சேர்ந்த பல கார்கள் இந்த அகன்ற நகரத்தில் இருந்தாலும் என் குடும்பத்தைச் சேர்ந்த கார் நான் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு டூப் இல்லை. பின்னர்தான் நான் சுமந்து செல்லும் நடிகைக்காகதான் அப்படி ஒரு பரபரப்பு என்பதையும் புரிந்து கொண்டேன்.

என்னால் அவருக்கு பெருமை என்பதைவிட அவரால் எனக்குப் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். மாம்பலம் சிவஞானம் தெருவிலிருந்து கிளம்பி, உஸ்மான் ரோடு வழியாக, ஆற்காட் ரோட்டில் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது நான் செல்லும் போது, ஒவ்வொரு முறையும் அனைவரின் பார்வையும் என் மீது திரும்பும் பெருமையை நீங்கள் எனக்கு தந்தாலும் சாp, நான் சுமக்கும் நடிகைக்குத் தந்தாலும் சாp... எனக்குத் திருப்திதான்.





சென்னைக்கு வந்ததும் அழகு நகரத்தின் அத்தனை மூலை முடுக்குகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு. ஆனால் முடியவில்லை. இருப்பினும் பிரபலமான பல இடங்களை நான் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் வேகத்திற்கேற்ற அகன்ற சாலைகள், என் ஊரைப்போல் (நான் பிறந்தது அமெரிக்கா தெரியுமில்லே) இங்கு இல்லாதது எனக்கு ஒரு வருத்தம்.

நான் சுமக்கும் பிரபல நடிகை ஜெயலலிதாவை நான் பேபி என்று அழைக்கிறேன். எனக்கு அவர் பேபிதான். குழந்தை மனம் கொண்டவரானதால் மட்டும் அப்படி கூப்பிடவில்லை. ஒரு குழந்தையை தாய் சுமப்பது போல் நான் என் பேபியை சுமக்கிறேன். ஆடாமல் அசையாமல் கண்ணிமைப்போல் காக்கிறேன். அந்தக் கலைச்செல்வியை லட்சக்கணக்கானவர்களின் கனவுக் கன்னிகையை காக்கும் பொறுப்பையல்லவா நீங்கள் எனக்கு தந்திருக்கிறீர்கள். அப்பாடி.. எவ்வளவு பெரிய பொறுப்பு.

என் பேபிக்கு இசையென்றால் உயிர். அதற்காக ரேடியோ ஒன்று என்னிடத்தில் உண்டு. வெயில் காலங்களில் கண்ணாடியைத் திறந்து போட்டுச் செல்ல முடிவதில்லை. தூசி படியும் என்பது மட்டுமல்ல, என் பேபியின் மேக்கப்பும் கலையும். ஆனால் குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலங்களில் குளுகுளுப்பாகவும் இருக்க தனித்தனி வசதிகள் செய்து கொண்டிருக்கிறேன். நான் பகல் வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டேதான் செல்வேன். இரவு தேவைப்படும்போது மட்டும் கண் திறந்து கொள்வேன். என் கண்ணிலிருந்து வரும் ஒளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் தெரியுமா?

 பேபியை மந்து கொண்டு நான் முதன்முறையாக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றேன். காசிதான் என்னை ஓட்டிச் சென்றார். கண்போல் என்னை காத்து வரும் அவர் மீது கோபம் கோபமாக வந்தது. பேபி விமானத்தில் ஏறி ஜப்பான் சென்றுவிட்டார். நான் தனியாக திரும்பி வரும்போது காசிக்கு மட்டும்தான் தெரியும் என் மனக்கஷ்டம். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் செல்லாமல் பேபி போய்விட்டாரே... இந்தக் காசியாவது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை? சொல்லியிருந்தால்...?
FILE

அந்த வருத்தத்தில் நான் பேபி போய் திரும்பி வரும்வரை ஷெட்டிலேயே கிடந்தேன். நான் பேபியைத் தவிர யாரையும் சுமக்கத் தயாராக இல்லையே. கொஞ்ச நாளிலேயே என் வருத்தம் குறைந்தது. ஆனால் அந்த விமானத்தின் மீதிருந்த கோபம் மட்டும் தணியவே இல்லை. அதற்கொரு சந்தர்ப்பமும் கிடைத்தது - பழி தீர்த்துக் கொள்ள.

சுமதி என் சுந்தரி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பேபி தேக்கடிக்குப் போகும் போது என்னையும் அழைத்துச் சென்றார். அதுதான் என் லாங்கஸ்ட் ட்ரிப். இங்கே சென்னையில் ஜனாதிபதியின் பரிசளிப்பு விழா மறுநாள் நடக்க இருந்தது. எனக்கு அந்த விழாவில் அப்படி ஜிம் என்று போய் நிற்க வேண்டுமென்று ஆசை. பேபிக்கும் பரிசு வாங்க துடிப்பு.

மாலையில் அங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துவிட்டேன். ஜனாதிபதி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இரவு கிளம்பி, தேக்கடிக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட திருப்தி மட்டுமல்ல எனக்கு. அந்த விமானத்தின் மீதிருந்த கோபத்தையும் தீர்த்துவிட்ட திருப்தி. மணிக்கு நூறு மைல்களுக்கு மேலேயே போய் பேபியின் சபாஷ் பெற்றதோடு விமானத்தை நம்பியிருந்தால் நான் போய் இதற்குள் வந்திருக்க முடியாது என்ற பாராட்டும் வேறு கிடைத்தது. போதாதா எனக்கு, தலைகால் புரியவில்லை.

பெரிய ஸ்டாரின் கார் ஆயிற்றே நீ... ஒரு படத்திலேயாவது நடிச்சிருக்கியா, அட்லீஸ்ட் இன் ஏ பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்? என்று என் பிரண்ட் பிளிமத் எப்போதும் கேட்பான். உங்களுக்குதான் பேபியிடம் ரொம்ப இது இருக்கே... நீங்களாவது எனக்கு சிபாரிசு செய்யக் கூடாதா? ப்ளீஸ்.

1972 ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையிலிருந்து அன்று வெளிநாட்டு கார்களின் மீதிருந்த பிரேமையையும், ஜெயலலிதா மீதிருந்த ரசிக பற்றையும் புரிந்து கொள்ளலாம். நமது பாலாபிஷேக ரசிகர்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதவர்கள்தான் அப்போதும் இருந்திருக்கிறார்கள் என்ற திருப்தியை இந்த கட்டுரை தருகிறது.

180 பேரை தன் வீட்டில் தங்க வைத்த அஜித்!

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களு,ம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரஜினி மற்றும் விஜய் தங்களின் கல்யாண மண்டபங்களை மக்களுக்காக திறந்து வைத்துள்ளனர். மேலும் இளையதளபதி விஜய் அவர்கள் 5 கோடிக்கு மதிப்பிளான பொருட்களை வழங்கிவருவதாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவயும் அவரே அளிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் மக்கள் தங்குவதற்கு அவரே அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.



வெளியாட்கள் யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிக்காத நடிகர்கள் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜித் அவர்களின் ரசிகர்கள் வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அகதிகள் ஆகிவிட்டோம் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு உதவும் வகையில் பல நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

உறவினர்களுக்கு டுவிட்டர் மூலம் தகவல் பரிமாற்றம், உணவு சப்ளை, முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு உதவி போன்றவை அளித்துள்ளனர்.

அதேசமயம் பல நட்சத்திரங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.‘மக்கள் கொடுக்கும் வரிப்பணம் எங்கு போகிறது.

மழை வெள்ளத்தில் இந்த பாதிப்புக்கு காரணம் அரசு நிர்வாகம்தான்’ என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார் கமல்ஹாசன்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு கோடம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு மற்றும் ஒலிப்பதிவு ஸ்டுடியோவுக்குள் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து அவர் கூறியது:

நண்பர்களும், நலம் விரும்பிகளும் கூறிய ஆறுதல் வார்த்தைக்கு நன்றி. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது.

நம்மில் பலர் தற்காலிக அகதிகள் ஆகி இருக்கிறோம். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ டீம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஸ்டுடியோ மற்றும் வீட்டுக்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலம்

வெளியேற்றுகிறார்கள். முழுவதுமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். சென்னையை மீண்டும் சரியான வகையில் புதுப்பித்து, எதிர்கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என நம்புகிறேன். கடவுள் நமக்கு எல்லா வகையிலும் இதனை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார்.

சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.


அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.


சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.


ஆவி பிடித்தல்


 தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


தண்ணீர்


 கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.


சுத்தமான மூக்கு


 தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


உப்புத் தண்ணீர்

 சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.


இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.


யூகலிப்டஸ் எண்ணெய்


 கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.


மூலிகைத் தேநீர்


 சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.


மஞ்சள் தூள்


 சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.


காரமான உணவுகள்


 காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!


ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.

சோள மாவு

சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.

பூண்டு

பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

லகிரி தைலம்

யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.

போரிக் அமிலம்

பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.

ரஜினி 10 லட்சம் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம் : ராம்கோபால் வர்மா கிண்டல்

 வெள்ள நிவாரண நிதி அளிக்கும் நடிகர்களை கிண்டல் செய்திருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

தமிழகம் மற்றும் சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா சார்பில் 25 லட்சம், விஷால் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 5 லட்சம், நடிகர் தனுஷ் 5 லட்சம், நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் என நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கும்  ராம்கோபால் வர்மா “ஐயோ, ரஜினிகாந்த் சார், நீங்க கொடுத்த 10 லட்சத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் முழிக்கிறார்கள். இதற்கு நீங்கள் நன்கொடை அளிக்காமலே இருக்கலாம்” என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும்  “மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை” என்றும் கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.

பல பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள். இதையும் கிண்டலடித்துள்ள ராம்கோபால் வர்மா “பிரபலங்கள் நிறைய பிரார்த்தனைகளையும், அன்பையும் வாரி வழங்குகிறார்கள். ஏனெனில் பணம் கொடுப்பதை விட அவைகள் மிகவும் மலிவானவை.



என்னை பொறுத்தவரை நான் ஒரு ரூபாய் கூட நன்கொடையாக கொடுக்க வில்லை. பிரபலங்களை போல் நானும் ஏராளமான அன்பையும், பிரார்த்தனைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு சுயநலவாதிதான்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் படகு மூலம் நடமாடும் ஏடிஎம் இயந்திரம்: நிதியமைச்சகம் உத்தரவு

 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பொது மற்றும் தனியார் வங்கி பிரதிநிதிகளின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுத்தவில்லை. சில வங்கிகள் சரியாக செயல்படாமல் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வங்கிகளின் நேரத்தை நீட்டிக்க அனைத்து வங்கிகளுக்கும் பரிந்திரைக்கப்பட்டுள்ளது.