Wednesday, December 30, 2015

சீனு ராமசாமியே சொல்லிட்டாரு… அப்புறம் என்னங்க?

‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்! குட்டிப்புலி படத்தில் அறிமுகமானவர். சில பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் என்றாலும், கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சௌந்தர்ராஜா. மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இயக்குனர் சீனுராமசாமி தனது முகப்புத்தகத்தில் சௌந்தர்ராஜா பற்றி நாலே நாலு வரி எழுதியிருக்கிறார். வேறு பல ஜன்னல்களை திறந்துவிடுகிற அளவுக்கு படு ஸ்டிராங்காக இருக்கிறது அந்த நாலு வரி.

“கதாநாயகனாக ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், உங்கள் படத்தில் நடித்தே தீருவேன். ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை என்று அடம் பிடித்து இதயத்தில் இடம் பிடித்த தம்பி நடிகர் சௌந்தரராஜா. ஒளிமயமான எதிர்காலம் இவனுக்கு உண்டு என்கிறது தர்மதுரையில் இவனை இயக்கிய பிறகு என் கணிப்பு! ” இதுதான் சீனுராமசாமியின் அந்த பதிவு.

விஜய்சேதுபதியும் இவரும் ஒரு காலத்தில் அறைத்தோழர்களாம். தனது நண்பன் வளர்ந்து உயர்ந்து நிற்கிற படத்தில் எவ்வித ஈகோவுக்கும் இடமில்லாமல் முகம் காட்ட ஆசைப்பட்ட இன்னொரு நண்பனை வாழ்த்துவதில் வஞ்சகம் எதற்கு? அள்ளுங்க அள்ளுங்க…!

0 comments:

Post a Comment