Tuesday, December 22, 2015

இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம்

 ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய கருத்தால் காயமுற்றதால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

முன்னதாக, சிம்புவின் 'பீப் பாடல்' குறித்து இளையராஜாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு அறிவு இருக்கா?'' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், இளையராஜா குறித்து விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபத்தில் நான் ராஜா சார் பற்றி கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.

இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம்'' என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment