Saturday, December 26, 2015

சிம்புவை சிக்க வைத்ததே விஷால் தரப்புதான்..இன்னும் யாரெல்லாம் சின்னாபின்னமாகப் போகிறார்களோ?

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று ஆர்வமானார்கள் பத்திரிகையாளர்கள். ஓப்பனிங் படு போர். சங்கத்தின் செயல்பாடுகளை பற்றியும், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் விஷாலும், நாசரும்.

மிக பொருத்தமான இடத்தில் பூனைக்கு மணி கட்டினார் ஒரு பத்திரிகையாளர். “சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன முடிவெடுத்திருக்கு?” என்பதுதான் அந்த மணி. நாசர்தான் பதில் சொன்னார். “இப்படியொரு பிரச்சனை வந்தவுடன் நாங்க அமைதியா இருக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் எங்கள் அணிக்கு எதிராக போட்டியிட்டவர் அவர். நாங்க என்ன கருத்து சொன்னாலும் அது தவறா போய்விடும் என்று அமைதியாகிவிட்டோம். அதற்கப்புறம் சரத்குமார்தான், நடிகர் சங்கம் சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கல? என்று கேள்வியை எழுப்பினார். இப்போ அவரே சிம்புவுக்கு ஏன் நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கல என்று கேட்கிறார்”.

“அப்படியிருந்தும் நானும் பொன்வண்ணனும் டி.ராஜேந்தரிடம் பேசினோம். அந்த பாடல் எப்படியோ மக்கள் மத்தியில் வந்திருச்சு. அதை யார் வெளியிட்டிருந்தாலும் பிரச்சனையில்ல. ஒரு மன்னிப்பு கேட்க சொல்லுங்க. போதும். பிரச்சனை முடிஞ்சுடும் என்றோம். ஆனால் அவர்தான் நாங்க சட்ட ரீதியா பார்த்துக்குறோம் என்று கூறிவிட்டார். அதற்கப்புறம் விஷாலும், கார்த்தியும் நேரடியாக சிம்புவிடம் பேசினாங்க. அவர்களும் அதையேதான் சொன்னாங்க. அதற்கு சிம்பு ஒப்புக் கொள்ளவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அதற்கு மேல நாங்க பேசுறது சரியா இருக்காது” என்றார்.

சிம்புவை நடிகர் சங்கத்தை விட்டே நீக்கணும்னு சிலர் கோரிக்கை எழுப்புறாங்களே? என்ற கேள்விக்கு, மிக திட்டவட்டமாக பதில் சொன்னார் விஷால். “அப்படியொரு பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் சிம்புவை சங்கத்தை விட்டு நீக்க மாட்டோம். சங்க பிரச்சனை அல்லாமல் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் எது பேசினாலும் அதற்கான பொறுப்பு அவரவர்களுக்குதான். அதற்கு சங்கம் பொறுப்பேற்க முடியாது” என்றார்.

உண்மை இப்படியிருக்க, ஏதோ அந்த பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டு சிக்க வைத்ததே விஷால் தரப்புதான் என்பது போல கதை கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இப்படிப்பட்ட திரைக்கதை மன்னன்களின் சூழ்ச்சியில் சிக்கி, இன்னும் யாரெல்லாம் சின்னாபின்னமாகப் போகிறார்களோ?

1 comments:

ராஜ நடராஜன் said...

நண்பரே! தயவு செய்து திசை திருப்பும் தவறான தலைப்பை முன் வைக்காதீர்கள். நன்றி

Post a Comment