Saturday, December 5, 2015

'கருத்து கந்தசாமி' 'குழப்பப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்' நடிகர் கமல்..: ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையை புரட்ட பெருவெள்ளம் குறித்து பேட்டியளித்திருந்த கமல்ஹாசன் தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் திரு.கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஓரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருயது இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருயது தமிழக மக்களைக் காப்பாற்ற, "மாண்புமிகு அம்மா" அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், "மாண்புமிகு அம்மா" அவர்களின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருயது தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு 1918 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் திரு.கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் "மாண்புமிகு அம்மா" அவர்கள் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த நவம்பர் திங்களில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பெருமழை பெய்து பாதிப்பினை ஏற்படுத்திய நேரத்தில், "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், என்னையும் அமைச்சர்கள் அனைவரையும், அரசின் உயர் அதிகாரிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் செய்தார்கள்.

இவ்வாறு சென்னை மற்றும் பிற மாவட்ட மக்களை மீட்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இம்மாத துவக்கத்தில் மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கடுமையாகத் தாக்கி ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத பாதிப்புகளைச் சீர்படுத்தி, மக்களை மீட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள், 3.12.2015 அன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிட்டார்கள்.

மேலும் "மாண்புமிகு அம்மா" அவர்களது ஆணைப்படி, அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகள் சரியானபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், வரலாறு காணாத வகையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளிலிருயது மக்களை மீட்டு, உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, நிவாரண நடவடிக்கைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருயது இதுவரை 11.53 இலட்சம் மக்கள் மீட்கப்பட்டு, 5009 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதி, மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களது அரசின் மூலம் இதுவரை 56.46 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

23,108 மருத்துவ முகாம்கள் நடத்தப் பெற்றுள்ளன. இத்தகைய போர்க்கால நடவடிக்கைகள் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக திரு. கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும்.

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடமிருயது பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரியதுகொள்ள வேண்டும் என்றால் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும்.

கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" அவர்கள் முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரியது கொள்ள வேண்டும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்களின் வரிப்பணத்தை வைத்துதான் சமூக நலப் பணிகளுக்கு 61,119 கோடி ரூபாயும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 49,930 கோடி ரூபாயும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உணவு மானியம் போன்ற மானியத் திட்டங்களுக்கும் 12,897 கோடி ரூபாயும் செலவிட, 2015-16 வரவு செலவுத் திட்டத்தில் சட்டமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மக்களின் வரிப் பணத்தை வைத்துத்தான் சாலை வசதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வளவு ஏன்? 2015-16 ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது.

ஆகவே, வரிப்பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் திரு. கமலஹாசன் அவர்களுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை. தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார்.

இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன்.

அப்போது, அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களுக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

"மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, இரக்க குணம் படைத்தவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தாங்களே முன்வந்து "மாண்புமிகு முதலமைச்சர்" நிவாரண நிதிக்கு அவர்களாகவே நிதியுதவி செய்கிறார்கள்.

மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, அவர்கள் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற கமலஹாசன் பாவ புண்ணியம் பற்றி கொண்டிருக்கும் கருத்தே வேறு அல்லவா?

அதனால்தான் கேட்காத ஒன்றை கேட்டதாகச் சொல்லி, பேட்டி அளித்துள்ளார். இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வயது வயது நிதி உதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா?

அந்த வகையில் தற்போதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி நேரடியாக சேவை செய்துவருகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமெனில் தெலுங்கு முன்னணி நடிகர் திரு. அல்லு அர்ஜுன் அவர்கள், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 இலட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். "ஈ என இரத்தல் இழியதன்று, அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழியதன்று கொள் என கொடுத்தல் உயர்யதன்று, அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்யதன்று" என்பதுதான் தமிழர் பண்பாடு.

அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் "மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா" அவர்களின் அரசு, திரு.கமலஹாசன் அவர்களிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும்.



இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 இலட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா?

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

0 comments:

Post a Comment