Saturday, December 19, 2015

ஒரு 'பீப்' ஒரு மாசம் டைம் கேக்குது... இன்னொரு 'பீப்' நான் அவனில்லைங்குது!

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று ஆஜராகாமல் பொய்யான காரணங்களைக் கூறி கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த இரு பீப் பிரதர்களின் சார்பில் அவர்களது தந்தைகள் காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிம்பு பிசியாக (?!) இருப்பதால் 30 நாள் அவகாசம் கேட்டு அவரது தந்தை டி.ராஜேந்தரும், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடிய ஆபாச பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருவருக்கும் எதிராக மாதர் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பினர். டிசம்பர் 19-ம் தேதி ( இன்று ) காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்மனை கொடுக்க சென்னை வந்த கோவை போலீசார், சிம்பு வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர்.

இதனிடையே, கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சிம்பு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து, சிம்பு, அனிருத் இருவரும் இன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

எதிர்ப்பார்த்தது போலவே இன்று சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. சிம்புவின் சார்பில் அவரது தந்தை டி.ராஜேந்திரரும், அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில், 'சிம்பு கொஞ்சம் வேலையில் பிசியாக இருப்பதால், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து 30 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும்,' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல் அனிருத்தின் தந்தை ரவிராகவேந்திரர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'சர்ச்சைக்குரிய அந்த பாடலுக்கு அனிருத் இசையமைக்கவே இல்லை. இதை ஏற்கனவே மீடியாக்கள் மூலம் தெரிவித்து விட்டோம். இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமே இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அனிருத்தை விடுவிக்க வேண்டும்,' என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அனிருத் சார்பில் அவரது வழக்கறிஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி அனிருத் தரப்பு விளக்கத்தை தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 'சிம்பு தரப்பில் கோரப்பட்ட 30 நாள் அவகாசம் என்பதை கொடுக்க முடியாது. அதேபோல் விசாரணையின்றி அனிருத் தரப்பு வாதத்தையும் ஏற்க முடியாது. எனவே இருவருக்கும் மீண்டும் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம்,' என போலீசார் தெரிவித்தனர்.

'விஐபி வீட்டு பையன்கள் என்பதால் இவ்வளவு நிதானம் காட்டும் போலீசார், இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? இருவர் சொல்வதும் பொய் என்று தெரிந்தும் எப்படி போலீசார் சும்மா இருக்கிறார்கள்? இருவரையும் மறு யோசனையின்றf உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுக் கொள்ளலாம்', என்று மக்கள் சமூகத் தளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment