Wednesday, December 23, 2015

இளைய தளபதி விஜய்.. இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா...?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தயாரித்து வரும் ‘நையப்புடை’ என்ற படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில், கதை நாயகனாக நடித்துள்ள டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘தாணு, என் நெருங்கிய நண்பர். அவர் அனுப்பியதாக, சில மாதங்களுக்கு முன்பு விஜயகிரண் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவரிடம், எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்? என்று கேட்டேன். ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு அவர், ‘லேப்டாப்’பை திறந்தார்.

விக்ரமன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல டைரக்டர்களிடம் விஜய்க்காக நான் கதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் நடித்துக் காட்டியபடி கதை சொல்வார்கள். இப்படித்தான் எனக்கு கதை கேட்டு பழக்கம்.

விஜயகிரண் என்ற அந்த இளைஞர் எனக்கு ‘லேப்டாப்’ மூலம் கதை சொன்னது, புதிய அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பும் ‘லேப்டாப்’ உதவியுடன்தான் நடந்தது.

ஒருநாள் காலை ஒன்பதே முக்கால் மணி ஆகியும் முதல் ‘ஷாட்’ எடுக்கவில்லை. என்ன ஆச்சுப்பா? என்று கேட்டேன். உடையலங்கார பெட்டி வரவில்லை என்றார்கள். எல்லோருமே அவரவர் உடையணிந்து தயாராக இருக்கிறார்களே? என்றேன். உடையலங்கார பெட்டி வரவில்லை. அதற்குள்தான் ‘லேப்டாப்’ இருக்கிறது என்றார், விஜயகிரண்.

‘‘ஏம்ப்பா சீன் நீதானே எழுதியிருக்கிறாய்...வாயினால் சொல்லுப்பா’’ என்றேன். ஆனால் அவர், ‘‘அது சரிப்பட்டு வராது’’ என்றார். அந்த ‘லேப்டாப்’ வந்த பிறகுதான் படப்பிடிப்பு நடந்தது.

இன்றைய இளைய தலைமுறை டைரக்டர்கள், ‘லேப்டாப்’புக்குள் மூளையை வைத்து இருக்கிறார்கள். ‘கம்ப்யூட்டர்’ மூலம்தான் கதை சொல்கிறார்கள். தப்பைக்கூட சரியாக நம்பிக்கையுடன் செய்கிறார்கள். தப்பைக்கூட சரியாக செய்தால், அது தப்பே இல்லை என்று பாடலே பாடுகிறார்கள்.

எனக்கு 73 வயது ஆகிறது. இந்த படத்தில் 75 வயதான முன்னாள் ராணுவ வீரராக நடிக்கிறேன். கோபக்கார முதியவர் வேடம். அங்கங்கே சண்டை காட்சிகள் வேறு. எனக்கு வேகமாக நடந்தாலே முழங்கால் வலிக்கும். அப்படிப்பட்ட என்னை சண்டை காட்சிக்காக கயிற்றில் கட்டி தொங்க விட்டார்கள்.

‘‘நீங்க கையை காலை அசைத்தால் போதும். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார்கள். படம் பார்த்து நானே மிரண்டு போனேன்.’’

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஜே.சூர்யா, வெற்றிமாறன், பட அதிபர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின், பி.டி.செல்வகுமார், நடிகர் ஜீவா, கவிஞரும், நடிகருமான பா.விஜய், டைரக்டர் விஜயகிரண், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 comments:

Post a Comment