
சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை சமூக வலைதளங்களில் ஒரு செய்தியும் படமும் வைரலாக பரவியது. அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாகவும் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்? எனவும் அதில் கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66% என பதிவாகி இருப்பதாகவும் அந்த செய்தியிலும் ப்ரிண்ட்ஸ்கிரீன் எடுக்கப்பட்ட இமேஜிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பரவிய அதேநேரத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் இணையதளம் சிறிது நேரம் இயங்காமல் இருந்தது. பின்னர் இயங்கிய அந்த தளத்தில் இந்த கருத்து கணிப்பு நீக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நமது எம்.ஜி.ஆர். இணையதளமானது, தங்களது வெப்சைட்டை சமூக விரோதிகள் ஹேக் செய்ததாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை விவகாரம்தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது!
0 comments:
Post a Comment