Tuesday, December 15, 2015

குறை சொல்லாமல் வாழ்வது எப்படி ?கண்டிப்பாக படியுங்கள் உங்களுக்கான மாற்றத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் !!

சிலர் எடுத்ததுக்கெல்லாம் எப்போதும் குறை சொல்வார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண முடியாது. குறை சொல்வதைத் தவிர்ப்பதே ஒரு பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும்’ என்று சொல்லி, குறை சொல்லாமல் இருப்பதன் பலாபலன்களை விளக்கி, குறை சொல்லும் குணத்தைத் தவிர்ப்பது எப்படி என்று சொல்கிறார் ‘எ கம்ப்ளைன்ட் ஃப்ரீ வேர்ல்டு’ என்கிற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வில் பொவென்.

‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதனை மாற்றுங்கள். மாற்ற முடியவில்லை என்றால் பிடிக்காததைப் பிடிக்கிற மாதிரி நீங்கள் மாறிக்கொள்ளுங்கள்.

அதை விட்டுவிட்டு, பிடிக்காத மற்றும் மாற்றமுடியாத விஷயத்தைப்பற்றி ஒருபோதும் குறை சொல்லாதீர்கள்’ என்ற அடிப்படை உண்மையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

குறை சொல்லியே வாழ்வதினால் நமக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்கிற கேள்விக்கு அழகான விளக்கத்தைத் தருகிறார் ஆசிரியர். ”குறை சொல்வதால் நெகட்டிவ் எண்ணங்கள் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்துகிடக்கிறது. ஒருமுறை பத்திரிகையாளர்கள் நடுவே, பாசிட்டிவாகச் செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினாராம் ஆசிரியர்.

‘பாசிட்டிவ்வாக நினையுங்கள், பேசுங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், நாங்கள் நல்ல செய்தியை வெளியிடும் நாளன்று நடக்கும் விற்பனையைவிட பிரச்னை, குழப்பம், சீர்கேடு என்று செய்தி போடும் நாட்களில்தான் எங்களுக்கு அதிக செய்தித்தாள் விற்கிறது’ என்றாராம் ஒரு நாளிதழின் அதிபர்.

ஆசிரியர் அவரிடம், ”மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் நெகட்டிவ் எண்ணங்களினாலேயே கெட்ட செய்தி தலைப்பாக வரும் நாளில் செய்தித்தாள்கள் அதிகம் விற்பனையாகிறது’ என்றாராம்.

மக்கள் மனதில் இருக்கும் பயமே கெட்ட செய்திகளை தெரிந்துகொள்ள தீராத ஆவலைத் தருகிறது என்கிறார் ஆசிரியர். அமெரிக்க தொலைக்காட்சி களில் வரும் 24 மணி நேர செய்தி சேனல்களில் பலவற்றையும் மேற்கோள் காட்டும் ஆசிரியர், அவற்றை செய்தி என்றே சொல்லமுடியாது. கெட்ட செய்தி என்று வேண்டுமென்றால் சொல்லலாம் என்கிறார். அந்த அளவுக்கு கொலை, கொள்ளை, விபத்து எனக் கெட்டவைகளின் தொகுப்பாக அது இருக்கிறது.

முப்பது நிமிட செய்தித் தொகுப்பில் 29 நிமிடம் கெட்ட செய்திகளும் ஒரேயொரு நிமிடத்துக்கு மட்டும் ஏதோ ஒரு நல்ல செய்தி தப்பித்தவறி வருகிறது. இதைச் செய்தி என்று சொல்வதைவிட கெட்டச் செய்தி என்று சொல்வதுதானே சரி என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

இதனாலேயே நான் முழுவதுமாக டிவி செய்தி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஆசிரியர், அப்புறம் எப்படி நாட்டுநடப்பைத் தெரிந்துகொள்வது என்று கேட்காதீர்கள். கெட்ட செய்திகளைச் சொல்ல நிறையபேர் உங்களைத் தேடிவருவார்கள் என்கிறார்.

”மூளை என்பது ஒரு தோட்டம் போன்றது. அதைச் செப்பனிட்டு நல்ல பல வாசமலர்களை அதில் பயிர் செய்து சந்தோஷமாக வாழவும் செய்யலாம். கரடுமுரடாக முட்செடிகளை வளர்த்துவிட்டு வருத்தத்துடனும் வாழலாம். எது உங்கள் சாய்ஸ்?” என்று கேட்கிறார்.

நாள் முழுக்க கெட்டதைப் பார்த்துக்கொண்டும், கெட்டதைக் கேட்டுக்கொண்டும் இருந்தால் எங்கே உங்கள் மூளையும் மனதும் நல்லதை நினைக்கும்? என்றும் கேட்கிறார்.

”நம் மனதிலும் மூளையிலும் பயிரிடப்படும் கெட்ட எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? குறை சொல்வதனாலேயேதான். எண்ணம் போல் வாழ்வு என்கிறீர்கள். எப்போதும் குறையைச் சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்தால் உங்கள் வாழ்வில் எங்கே நிறைவு வரும்?” என்று கேட்கிறார் ஆசிரியர்.

பெரும்பாலான குறைகள் நம்மை நாம் உயர்வாக எண்ணிக்கொண்டும் நம் மனதினில் தோன்றும் மாயக்குறைகளைச் சொல்வதற்காகவுமே சொல்லப்படுகிறது என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான பல உதாரணங்களைச் சொல்லியுள்ளார்.

”குறை சொல்லுதல் என்பது நம்முடைய ஃபோகஸை பிரச்னையின் மீது நிறுத்திவைக்கிறதே தவிர, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வைப்பதில்லை. குறைசொல்லும் பழக்கம் உடல்நலத்தையும் பாதிக்கும். உங்கள் வாய்க்குள் செல்லும் உணவு உங்கள் உடலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாயிலிருந்து வரும் குறை சொல்லும் வார்த்தைகள் உங்களைச் சுற்றியிருக்கும் சூழலை நிர்ணயிக்கிறது” என்கிறார்.

நாம் ஏன் குறை சொல்கிறோம் என்பதற்கு பின்வருவனவற்றையே காரணமாகச் சொல்கிறார் ஆசிரியர். ”மற்றவர்கள் கவனம் நம் மீது திரும்ப, நம்மிடம் இருக்கும் பொறுப்பை கைகழுவிவிட, பொறாமை கொள்பவர்களின் காலை வாரிவிட, பவர்ஃபுல்லாக மாற, நம்முடைய திறமையற்ற செயல்களுக்கு சப்பைக்கட்டுக் கட்ட என்பது போன்ற சூழல்களிலேயே நாம் குறைசொல்ல ஆரம்பிக்கிறோம்” என்கிறார் ஆசிரியர்.

நாம் அனைவருமே ஒரு விஷயம் இல்லாவிட்டால் மற்றொன்றில் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசித்து, குறைசொல்வதால் வரும் நெகட்டிவ் எண்ணங்களை மாற்றி பாசிட்டிவ்வான வாழ்க்கைப் பாதைக்கு செல்ல முயலலாம்.

0 comments:

Post a Comment