Thursday, December 17, 2015

சபாஷ், சரியான '2' போட்டி

தென்னிந்தியத் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே தங்களுடைய படைப்புகளால் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், இரண்டாமவர் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி.

ஷங்கர் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார். ராஜமௌலி, 'மகதீரா' படத்தை இயக்கிய பிறகு உச்சத்திற்குப் போனார். தற்போது 'பாகுபலி' படத்தின் வெற்றி மூலம் ஷங்கர் புரியாத ஒரு சாதனையையும் புரிந்துவிட்டார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து தங்களது '2'ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' நேற்று சென்னையில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது. படத்தின் பெயரே '2.0' என்பதுதானாம். ராஜமௌலி 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இன்று ஹைதராபாத்தில் ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே 40 சதவீத படப்பிடிப்புகள் இரண்டாம் பாகத்திற்காகவும் முடித்து விட்டார்கள் என்பது பழைய பழைய செய்தி.

ஷங்கரின் '2.0' படமும், ராஜமௌலியின் 'பாகுபலி 2' படமும் வரும் போது கண்டிப்பாக சமூக வலைத்தளங்களில் இந்த '2' படங்களின் வசூலைப் பற்றியும், தரத்தைப் பற்றியும் காரசாரமான விவாதங்களும், மோதல்களும் எழப் போவது உறுதி.

0 comments:

Post a Comment