Monday, December 7, 2015

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.

சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர். சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எல்லாம் உண்டு. அவர்கள் இந்த வெள்ள நிவாரணம் எதிலும் ஈடுபட்டதாக தகவலே இல்லை. தலைவர் மாதிரியே இவர்களும் அமைதியாகிவிட்டனர்.

அதன் பிறகு இந்த நடிகர் அவ்வளவு தந்தார், அந்த நடிகர் இவ்வளவு தந்தார் என்று அளந்துவிட்டார்கள் அவரவர் ரசிகர்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் புண்ணியத்தால் வழங்காத பணமெல்லாம் நிவாரண நிதியாகக் குவிந்ததுதான் சோகம்.

நடிகர் விஜய் ரூ 5 கோடியுடன் காத்திருக்கிறார், தன் கல்யாண மண்டபங்களையெல்லாம் மக்களுக்கு திறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல் பரப்பினர். விசாரித்ததில் அவர் எந்த நிதியும் தரவில்லை மண்டபங்களையும் திறக்கவில்லை என தெரிய வந்தது. அதுவும் அந்த தேதிகளில் அந்த மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.

அடுத்து அஜீத் ரூ 60 லட்சம் அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டைக் கூட மக்களுக்காக திறந்து வைத்தார் என்று றெக்கை கட்டிப் பறந்தது இன்னொரு செய்தி. ஆனால் அவரும் அப்படி எதுவும் தரவில்லையாம். பெருமழை நாளன்று அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்.

கமல் எந்த நிதியும் வழங்கவில்லை. இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார் அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டையிட்டு கொண்டது தான் மிச்சம்.

0 comments:

Post a Comment