Friday, December 11, 2015

முதல்வர் கையில்தான் கொடுப்பேன்! நயன்தாரா பிடிவாதம்?

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினியும் பத்து லட்சம், நம்ம ஹன்சிகாவும் பத்து லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும், ஈகை குணமும் மிக்க நயன்தாரா எங்கே என்று மனசு தேடுமல்லவா? அப்படிதான் தேடுகிறது சினிமா டெக்னீஷியன்களின் கண்கள். சக தொழிலாளிக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவி செய்யும் குணமுடைய நயன்தாரா எதையும் விளம்பரமாக்கிக் கொண்டதில்லை. கடந்த முறை சுனாமி வந்து மக்கள் கடும் உயிர் பலியை சந்தித்தபோது நயன்தாராதான் சினிமாவுலகத்திலிருந்து முதல் நிதியை வழங்கினார். அப்போதே பத்து லட்சம்!

அப்படிப்பட்ட நயன்தாரா எங்கு போனார்? ஏன் இன்னும் நிதியளிக்கவில்லை? நிச்சயம் அது நிறைவான தொகையாகதான் இருக்கும் என்றெல்லாம் சினிமாவுலகம் எதிர்பார்த்து காத்திருக்க, நம் காதுக்கு வந்த செய்தி… அட! அட!!

இந்த தடவையும் நிதியை நேரடியாக முதல்வரை சந்தித்துதான் கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்திலிருக்கிறாராம் நயன்தாரா. அதனால்தான் அந்த நல்ல செய்தி வர தாமதம் ஆகிறது என்கிறார்கள். மனசு சொல்லும்போதே மணி பர்சை திறந்துடுங்க நயன்தாரா! நாள் போக போக, சுருக்குப்பை இறுக்கமாகிடும் என்பதுதான் மனுஷ மனசின் மகத்துவம்!

0 comments:

Post a Comment