Thursday, December 10, 2015

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

இதுவரை நீங்கள் மாலையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெறுமனே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு வறுவல் செய்து மதிய வேளையில் சாம்பார் சாதம் அல்லது குழம்பு சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடலாம். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு போதிய அளவு தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

விசில் போனதும் குக்கரை திறந்து, கிழங்கின் தோலை உரித்துவிட்டு, பின் வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிவிட வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

ஒருவேளை வாணலியில் கிழங்கு அடிபிடிப்பது போன்று தெரிந்தால், எண்ணெய் சிறிது ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். கிழங்கானது பொன்னிறமானதும் அதனை இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெடி!!!

0 comments:

Post a Comment