Wednesday, December 9, 2015

ஒட்றா ரெண்டாவது வார போஸ்ட்டர…! பாபி சிம்ஹா படத்துக்கு மவுசு!

கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை. ஜனங்களும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குய்யோ முய்யோ… அந்த நேரத்தில்தான் ‘உறுமீன்’ ரிலீஸ். கடந்த 4 ந் தேதி வெளியாவதாக இருந்த ரஜினி முருகன், ஈட்டி ஆகிய இரு படங்களும் ‘ஆளை விட்றா மழைப்பயலே’ என்று அடுத்தடுத்த தேதிகளுக்கு ஓடிவிட, வேறு வழியில்லாமல் திரைக்கு வந்தது உறுமீன். “இவ்ளோ மழையடிக்குது. உங்களுக்கு அவ்வளவு தைரியமா? ஜனங்களோட கஷ்டத்தை நினைச்சு பார்த்தீங்களா?” என்று நேருக்கு நேர் சுடு சொல் வீசிய அத்தனை கேள்விகளையும் மிக நாசுக்காக தவிர்த்துவிட்டு ரிலீஸ் வேலையை பார்த்தது படத்தை வெளியிட்ட தேனான்டாள் பிலிம்ஸ்.

“நாங்க இந்த மழையை எதிர்பார்க்கல. முன்னாடியே வெளிநாட்டு ரிலீசுக்கான பிரிண்ட்டை அனுப்பிட்டோம். இப்போ தமிழ்நாட்டுல ரிலீசை தள்ளி வைச்சா, படம் வர்றதுக்குள்ள திருட்டு விசிடி வந்துடும். அதனாலதான் ரிலீஸ் பண்றோம். மற்றபடி ஜனங்க இவ்ளோ கஷ்டத்துல இருக்கும்போது அந்த துக்கத்துல நாங்களும் பங்கெடுத்துக்கணும்னு நினைச்சாலும் முடியல” என்று அப்பாவி முகம் காட்டினார் டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி. இருந்தாலும் சென்னையில் சில தியேட்டர்களிலும், பிற மாவட்டங்களில் சுமார் 175 தியேட்டர்களிலும் படத்தை வெளியிட்டார்கள்.

எல்லா இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். இந்த மழை மட்டும் இல்லேன்னா இன்னும் கூட கல்லா கட்டியிருக்கலாம் என்கிற நிலைமை. நாலாபுறத்திலிருந்தும் படத்திற்கு கிடைத்த மவுத் ரெஸ்பான்ஸ், தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதற்காக என்ன செஞ்சாங்களாம்?

“அட்றா செகண்ட் வீக் போஸ்டரை!” என்று கூறிவிட்டார்கள். சுட சுட தயாராகிக் கொண்டிருக்கிறது வெற்றிகரமான 2 வது வார போஸ்டர். பாபி சிம்ஹா சும்மாவே முறுக்குவாரு. இப்ப இது வேறயா?

0 comments:

Post a Comment